மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். செர்பியாவைச் சேர்ந்த மாடலான நடாஷா, இந்தியில் நடந்த பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். அதன்பின் பாலிவுட்டில் சில சிறிய ரோல்களில் நடித்திருந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக மாடலிங் துறையில் முன்னேறிய நடாஷா ஸ்டான்கோவிக், 2019ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவுடன் காதல் உறவில் இணைந்தார். இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இருவருமே தங்களின் உறவை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடம் வெளிப்படையாகவே அறிவித்தனர். ஹர்திக் பாண்டியாவை விடவும் நடாஷா 2 வயது மூத்தவர்.

இதன்பின் நடாஷா ஸ்டான்கோவிக் கர்ப்பமடைந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் முடிவடைந்தது. பின்னர் ஜூலை மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அகஸ்தியா என்று பெயரிட்டனர். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், திருமணத்திற்கு பின் நடாஷா நடிப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருமே தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்து ஹர்திக் பாண்டியா நாடு திரும்பிய சூழலில், நேற்று நடாஷா ஸ்டான்கோவிக் அவரின் சொந்த நாடான செர்பியாவுக்கு மகனுடன் புறப்பட்டார்.
தொடர்ந்து நேற்றிரவு இருவரும் தாங்கள் இருவரும் பிரிவதாக சோசியல் மீடியா மூலம் அறிவித்தனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து விவாகரத்துக்கு பின் ரூ.170 கோடி சொத்துக்களை நடாஷா ஸ்டான்கோவிக் எழுதி வாங்கிவிட்டதாக சோசியல் மீடியாவில் பேச்சுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்கையில், ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு ரூ.91 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் மாத வருமானம் ரூ.1.2 கோடியாக உள்ளது. அதேபோல் நடாஷா ஸ்டான்கோவிக்கின் சொத்து மதிப்பு ரூ.20 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டியில், தனது வங்கி கணக்குகள், வீடு, பங்களா, கார் என்று அனைத்திலும் பாதிக்கு பங்குகள் தனது தாய் பெயரில் உள்ளது என்று கூறியுள்ளார்.
இதன் மூலமாக நடாஷா ஸ்டான்கோவிக் ரூ.170 கோடி மதிப்பிலான ஹர்திக் பாண்டியாவின் சொத்துக்களையோ, அல்லது அவரின் 70 சதவிகித சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டு செர்பியா சென்றுள்ளார் என்பது வதிந்தியாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் ஹர்திக் பாண்டியா தனது மகனுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் எப்போதும் செய்வேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.