2011 உலக கோப்பையை இந்தியா பிக்சிங்கால் வென்றதாம்.. ரணதுங்கா கருத்தால் ரணகளம்
டெல்லி: 2011ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியாவிடம், இலங்கை தோற்ற விவகாரத்தில் மர்மம் இருப்பதாக அந்த நாட்டு அணி முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுளள்ளது.
ரணதுங்காவின் விஷமத்தனமான கருத்துக்கு, இந்திய வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

சேவாக், சச்சின் ஏமாற்றம்
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் டக் அவுட்டானார். சச்சின் 18 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் கவுதம் கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்கள் குவித்தார். கோஹ்லி 35 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 91 ரன்கள் விளாசி வெற்றிக்கான ரன்னை சிக்சர் மூலம் எடுத்தார். மறுமுனையில் யுவராஜ்சிங் 21 ரன்களுடன் நின்றார்.
Recommended Video

கம்பீர், டோணி அபாரம்
டோணி அடித்த வெற்றிக்கான சிக்சர்கள் இப்போதும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால் சச்சின், சேவாக் விரைந்து அவுட்டான உடன் இலங்கை வென்றுவிடும் என அந்த நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர் டோணி, கம்பீர் ஆட்டம் மற்றும் கோஹ்லி கொடுத்த பார்ட்னர்ஷிப் ஆகியவை இந்தியாவுக்கு வெற்றியை ஈட்டித்தந்தன.

ரணதுங்கா புது குண்டு
ஆனால், அர்ஜூனா ரணதுங்கா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ரணதுங்கா வெளியிட்ட வீடியோ பதிவில், "வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நானும் இந்தியாவில் வர்ணனையாளராக இருந்தேன். நாம் தோல்வி அடைந்தபோது வேதனைப்பட்டேன். அத்துடன் எனக்கு சந்தேகமும் எழுந்தது. அந்தப்போட்டியில் இலங்கைக்கு என்ன ஆனது என்பது குறித்து நாம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்" என கூறியுள்ளார்.

பரபரப்பு
மேலும், "எல்லாவற்றையும் இப்போது என்னால் வெளியிட முடியாது என்றும் ஒருநாள் வெளியிடுவேன். எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும். வீரர்கள் தாங்கள் அணிந்திருக்கும் தூய்மையான ஆடைகளால் உள்ளே இருக்கும் அழுக்கை மறைக்க முடியாது" என்றும் கூறியுள்ளார் ரணதுங்கா" இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்பீர் கடுப்பு
இதனிடையே ரணதுங்காவின் கருத்துக்கு கவுதம் கம்பீர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். "ரணதுங்காவின் பேச்சுக்கள் என்னை வியக்க வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் மதிப்புமிக்க ஒருவரின் தீவிரமான கருத்து இதுவாகும். உரிய ஆதாரங்களுடன் அவர் தனது குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டும் நான் கருதுகிறேன்" என்றார்.

நெஹ்ரா சீற்றம்
ஆஷிஷ் நெஹ்ராவும் இதை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில் "ரணதுங்காவின் கருத்துக்கு பதிலளித்து பெருமை சேர்க்க நான் விரும்பவில்லை. இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு (ரணதுங்கா தலைமையில்) பெற்ற வெற்றி குறித்து நான் கேள்வி எழுப்பினால், அது நன்றாக இருக்காது. இந்த விவாகாரத்தில் ஈடுபடவிரும்பவில்லை. அவரைப்போன்ற உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் இது போன்று கூறும் போது வருத்தம் அளிக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications