இதெல்லாம் ரொம்ப ஓவர்.. மனமுடைந்த குல்தீப் யாதவ்.. பயிற்சி செய்யவே வரலை.. நோய்த் தொற்று என்ற கேப்டன்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அனுபவ சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், குல்தீப் புறக்கணிக்கப்பட்டது குறித்துப் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்திய டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடுத்தபடியாக சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தவர் குல்தீப் யாதவ். இந்திய ஒருநாள் அணியில் முக்கிய வீரராக வலம் வரும் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இருந்ததால் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.

அஸ்வின் ஓய்வு பெற்ற பிறகும், அவருக்குப் புறக்கணிப்பே மிஞ்சியுள்ளது. பேட்டிங் செய்யத் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்பதில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் காயத்தால் விலகிய நிலையிலும், தற்போதைய இலங்கை டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் குல்தீப் விளையாடினார். ஆனால், அவருக்கு மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற இடமே வழங்கப்பட்டது. ஜடேஜா மற்றும் மானவ் சுதருக்கு அதிக ஓவர்கள் வீச வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், குல்தீப்புக்கு மிகவும் தாமதமாகவே ஓவர்கள் வழங்கப்பட்டன. குறைந்த ஓவர்களே வழங்கப்பட்டன. இதனால் அவரால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் போனது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட்டு, அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டி முடிந்த உடனேயே, இரண்டாவது டெஸ்டில் தமக்கு இடம் கிடையாது என்பது குல்தீப் யாதவுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவருத்தம் அடைந்த அவர், போட்டிக்கு முன்னதாக நடந்த மூன்று நாள் வலைப் பயிற்சியில் பங்கேற்கவில்லை. இரண்டு நாட்கள் கட்டாயப் பயிற்சி செய்ய வேண்டிய விதிமுறை இருந்தும், தமக்கு ஓய்வு வேண்டும் எனக் கூறி அவர் பயிற்சியைத் தவிர்த்துள்ளார். எனினும், இரண்டாவது டெஸ்ட் துவங்கும் முன் டாஸ் நிகழ்வில் சுப்மன் கில், குல்தீப் யாதவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்துப் பல முன்னாள் வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் ஒரு மூத்த வீரர் மீது நம்பிக்கை வைக்காத போது, அவர் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
