சென்னை : சமீபத்தில் நடந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையே ஆன ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய மன்கட் சம்பவம் ஒன்று நடந்தது.
மன்கட் என்பது கிரிக்கெட்டில் தொடர்ந்து சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. மன்கட் சரியா? தவறா? அது குறித்து இங்கே பார்ப்போம்.
நியூசிலாந்து பேட்டிங் ஆடிய போது அந்த அணியின் வீரர் இஷ் சோதி களத்தில் எதிர்முனையில் இருந்தார். பெர்குசன் பேட்டிங் செய்து வந்தார்.

அப்போது வங்கதேச அணியின் ஹாசன் மஹ்முத் பந்துவீச ஓடி வந்தார். இஷ் சோதி, ஹாசன் பந்து வீசும் முன்பே கிரீஸை விட்டு முன்னேறிச் சென்றார். இதை கண்ட ஹாசன் பந்தை வீசாமல் ஸ்டம்ப்பை தகர்த்து அவர் ரன் அவுட் என கூறினார். பின் அம்பயர்கள் பேசி இஷ் சோதி ரன் அவுட் என அறிவித்தனர்.
உடனே இஷ் சோதி இப்படி செய்வது தவறு என வங்கதேச வீரர்களிடம் கூறிக் கொண்டே களத்தை விட்டு வெளியேறினார். அப்போது வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட்டின் நேர்மையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் இஷ் சோதியை மீண்டும் பேட்டிங் ஆட அழைத்தார்.
இந்த சம்பவம் மீண்டும் மன்கட் முறையில் செய்யப்படும் ரன் அவுட் குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. கிரிக்கெட் விதிப்படி பந்துவீச்சாளர் ஓடத் துவங்கிய பின் எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே சென்றால் அவரை ரன் அவுட் செய்யலாம்.
ஆனால், மீண்டும் மீண்டும் இது கிரிக்கெட்டின் நேர்மைக்கு எதிரான செயல் என்றே பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். இங்கே எது நேர்மையற்ற செயல் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பே சில அடி தூரம் முன்னேறிச் செல்கிறார் ஒரு பேட்ஸ்மேன். அவர் ஏன் அதை செய்கிறார்? பந்தை மற்றொரு வீரர் அடித்த உடனே தான் வேகமாக ரன் ஓட வேண்டும். அப்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க வேண்டும். அதற்கு இப்போதே சில அடி தூரத்தை எடுத்து வைத்து விட்டால் அடுத்து ரன் ஓடும் போது ரன் அவுட் ஆகும் வாய்ப்பு குறையும். இது முற்றிலும் எதிர்முனை பேட்ஸ்மேனின் சுயநலமான செயல். அவர் அணிக்கு சாதகமான செயல். விதியை மீறிய செயல்.
சரி, இப்போது ஒரு எதிர்முனை பேட்ஸ்மேன் பந்து வீசும் முன்பே சில அடி தூரம் எடுத்து வைத்து விட்டார். அவர் ரன் ஓடவே இப்படி செல்கிறார் என்பதை உணர்ந்த ஒரு பந்துவீச்சாளர் அவரை ரன் அவுட் செய்கிறார். விதிப்படி அவரை ரன் அவுட் செய்ய முடியும். மேலும், பேட்ஸ்மேன், பந்து வீசும் அணியை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை குறைக்கவே இப்படி சில அடி தூரத்தை பந்து வீசும் முன்பே எடுத்து வைக்கிறார்.
ஆக, தனது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைக்கும் ஒரு வீரரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்கிறார் ஒரு பந்துவீச்சாளர்.
இந்த இரண்டில் எது சரி? எது தவறு? பேட்ஸ்மேன் விதியை மீறுவாராம். ஆனால், அவரை விதிப்படி ரன் அவுட் செய்தால் அது தவறாம். இதே விஷயத்தை பேட்ஸ்மேன் முனையில் செய்தால் அதை தவறு என சொல்வார்களா?
ஒரு பேட்ஸ்மேன் பந்தை தவறவிட்டு விடுகிறார். பந்து வீசி முடிந்தாகி விட்டது. அவர் அதை அடிக்கவும் தவறி விட்டார். அத்துடன் அவர் கிரீஸை விட்டு செல்லலாமே. ஆனால், அடுத்த பந்தை வீச பீல்டிங் செய்யும் அணி தயாராகும் அந்த ஒரீரு வினாடிகள் வரை பேட்ஸ்மேன் கிரீஸில் தான் நிற்க வேண்டும். அவர் நகர்ந்தால் விக்கெட் கீப்பர் அவரை ஸ்டம்பிங் செய்ய முடியும். இதை தவறு, கிரிக்கெட்டின் நேர்மைக்கு எதிரான செயல் என யாரும் சொல்வதில்லை.
ஆனால், பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியாகும் வரை எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீஸில் தான் நிற்க வேண்டும் என்று சொல்லும் போது மட்டும் அதை மீறுவது தவறாகாது என சிலர் சொல்வதைத் தான் ஏற்க முடியவில்லை. அதை விடக் கொடுமை, ரன் அவுட் செய்த பின் அந்த வீரரை மீண்டும் ஆட அழைப்பது.
பேட்ஸ்மேன் ரூல்ஸை மீறி அவுட் ஆவாராம். இவங்க மறுபடி ஆட சொல்வாங்கலாம். என்னங்க சார் உங்க நியாயம்?