லக்னோ: 2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் தான் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் தளத்தில், "நான் மனிதர்களை அவர்கள் அளிக்கும் முடிவுகளை வைத்துத்தான் அளவிடுகிறேன்; எந்தவொரு (வெற்றிகரமான) முடிவையும் தராமல் சும்மா எவ்வளவு நேரம் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை வைத்து அல்ல. என்ன செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஒருவருக்கான உண்மையான அளவுகோல்" என்று அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ரசிகர்கள் பலரும் இது முன்னாள் கேப்டன் கே.எல் ராகுலை விமர்சித்துப் போடப்பட்டதா அல்லது தற்போதைய கேப்டன் ரிஷப் பண்ட்டை எச்சரிக்கும் வகையில் போடப்பட்டதா எனத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். "இது ரிஷப் பண்ட்டுக்கா அல்லது கே.எல் ராகுலுக்கா?", "ரிஷப் பண்ட்டை மறைமுகமாகத் தாக்குகிறாரா?" என்பது போன்ற பல கேள்விகளை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.
கே எல் ராகுல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே லக்னோ அணியை விட்டு வெளியேறி விட்ட நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் தோல்விக்கு கேப்டன் ரிஷப் பண்ட் தான் காரணம் என்பதை சுட்டிக் காட்டியே சஞ்சீவ் கோயங்கா தற்போது இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார் என சில ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரின் போது ஒரு போட்டிக்குப் பிறகு, மைதானத்திலேயே கே.எல் ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா மிகவும் கோபமாக விவாதித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்த சீசனுக்கு முன்பாகவே ராகுல் லக்னோ அணியிலிருந்து விலகி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குச் சென்றார். கே எல் ராகுல்தற்போது 2026 தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
தற்போது லக்னோ அணி புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அணியாகக் களமிறங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 ஐபிஎல் தொடரின் முதல் கட்டப் போட்டிகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற உள்ளன.

இதில் லக்னோ அணி தனது முதல் போட்டியில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி கே.எல் ராகுல் அங்கம் வகிக்கும் அதே டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தைப் பிடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணி, இந்த முறை அதிரடியான மாற்றங்களுடன் தனது முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாகக் காத்திருக்கிறது.
