கொழும்பு : சூர்யகுமார் யாதவுக்கு இந்திய ஒருநாள் அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டாலும், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் டி20 போட்டிகளில் ஆடுவது போல கண் மூடித்தனமாக அதிரடி ஆட்டத்தை ஆட முயன்று அதில் தோல்வி அடைந்து வருகிறார்.
2023 ஆசிய கோப்பை தொடரில் முந்தைய தினம் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் அவர் 34 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில், 2023 உலகக்கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணி சூர்யகுமாரை விட சரியான வீரரை ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற விமர்சனம் எழத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன் எந்த வகையில் சூர்யகுமாரை விட தாழ்ந்தவர்? அவர் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 55 வைத்துள்ளார் அவரை ஏன் அணியில் தேர்வு செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூர்யகுமார் விமர்சனம் : ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றாலும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதிக்கு முன்னேறி விட்டதால், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தது. அதன்படி சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் ஆட வைக்கப்பட்டார். அவர் டி20 போட்டிகளில் மட்டுமே ரன் குவிக்கிறார். ஒருநாள் போட்டிகளில் ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனத்தை இந்தப் போட்டியில் உடைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஸ்வீப் ஷாட் முயற்சி : போட்டியில் இந்திய அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கினார் சூர்யகுமார். வெற்றிக்கு இன்னும் 172 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அவர் முதலில் நிதான ஆட்டம் ஆடினாலும், பின் தொடர்ந்து சுழற் பந்துகளில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். போட்டி நடந்த கொழும்பு ஆடுகளம் அதிகமாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் அவர் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று பவுல்டு அவுட் ஆனார்.
சஞ்சு சாம்சன் ஆடி இருக்கலாம் : இந்த நிலையில் தான் இணையத்தில் இந்திய அணி ரசிகர்கள், சூர்யகுமாருக்கு பதில் சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் ஆடி இருக்கலாம் என கூறத் துவங்கினர். அவர் டி20 போட்டிகளில் சரியாக தன்னை நிரூபிக்காமல் போனாலும் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாகவே ஆடி இருக்கிறார்.
திலக் வர்மாவுக்கு கூட வாய்ப்பு : ஏற்கனவே, தன் வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கும் சஞ்சு சாம்சனை விட்டுவிட்டு, இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்காத திலக் வர்மாவுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர் அறிமுகம் ஆனார். அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதையும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசுவோர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஒருநாள் போட்டி சராசரி : ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன் சராசரி 55 ஆகும். ஆனால், சூர்யகுமாரின் பேட்டிங் சராசரி 24 மட்டுமே. எனினும், அவரை உலகக்கோப்பை அணியிலும் சேர்த்து இருக்கிறது ரோஹித் மற்றும் டிராவிட் கூட்டணி. ஏன் சஞ்சு சாம்சனை உலகக்கோப்பை அணியில் சேர்க்கக் கூடாது எனவும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சேஸிங் செயல்பாடு : மேலும், சஞ்சு சாம்சன் சேஸிங் செய்த போட்டிகளில் எப்படி ஆடி இருக்கிறார் என்பதை சிலர் குறிப்பிட்டு இருக்கின்றனர். தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில், களமிறங்கிய அவர் 86 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். வேறு சில போட்டிகளில் இந்திய அணி 97 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்த போது களமிறங்கி ஆட்டமிழக்காமல் 43 ரன்களும், மற்றொரு முறை 79 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்த போது களமிறங்கி 54 ரன்களும் எடுத்து இருக்கிறார். தன் கடைசி போட்டியில் கூட அவர் 51 ரன்கள் குவித்து இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
டி20க்கு சரி.. ஆனால் : சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கு தகுதியான வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே போன்ற ஆட்டத்தை அவர் ஒருநாள் போட்டிகளில் ஆட முடியாது. அதை அவர் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் புரிந்து கொண்டு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே, டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படாவிட்டாலும், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் அளிக்க வேண்டும்.