
2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 29 அன்று துவங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு அப்போது அதிகரித்ததால் ஐபிஎல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, லாக்டவுன் விதிகள் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியது.

சிக்கல்கள்
அப்போது விசா வழங்கப்படாததால் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலையும் இருந்தது. இதை அடுத்து பிசிசிஐ கால வரை இன்றி ஐபிஎல் தொடரை தள்ளி வைத்தது. ஆனால், இதனால் பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் மட்டுமின்றி வீரர்கள், ஊழியர்கள், விளம்பரதாரர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர்.

5,000 கோடி நஷ்டம்
ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் ஒட்டுமொத்தமாக 5,000 கோடி நஷ்டம் ஆகும் என கூறப்படுகிறது. தற்போது லாக்டவுன் விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் அனைவரும் தங்கள் பணிகளுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை தொடர்
இந்த சூழலில், அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 2020 டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபரில் நடக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த தொடர் நடக்க வாய்ப்பு இல்லை. தொடரை நடத்தும் ஆஸ்திரேலியாவும் இந்த சமயத்தில் உலகக்கோப்பையை நடத்த விரும்பவில்லை.

சந்தேகம்
தற்போது ஐசிசி 2020 டி20 உலகக்கோப்பையை தள்ளி வைக்கும் அறிவிப்பை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால், அதை இரண்டு முறை நடந்த ஐசிசி கூட்டத்திலும் அறிவிக்காமல் தள்ளிப் போட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து தான் இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.

அதிகார மோதல்
தற்போதைய ஐசிசி தலைவர் ஷஷான்க் மனோகருக்கும், தற்போதைய பிசிசிஐ அதிகார வர்க்கத்துக்கும் இடையே பல பிரச்சனைகள் முன்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ஐசிசி டி20 உலகக்கோப்பையியோ தள்ளிப் போடும் அறிவிப்பை தாமதப்படுத்தி அதன் மூலம் ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ தயார் ஆவதை நிறுத்த முயற்சி செய்யலாம் என கூறப்படுகிறது.

விரைவில் தேர்தல்
ஐசிசியின் இந்த செயல் குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமாலிடம் கேட்ட போது, ஐசிசி தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் டி20 உலகக்கோப்பை முடிவில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

விரைவில் முடிவு வேண்டும்
"நான் இது பற்றி கருத்து கூற மாட்டேன். ஐசிசி தேர்தலால் எல்லாமே குழப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆஸ்திரேலியா இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரை நடத்த விரும்பவில்லை என ஊடகங்களில் செய்தி வருகிறது. அது உண்மை என்றால், விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

அனைவருக்கும் அவசியம்
மேலும், உலகக்கோப்பை நடக்கவில்லை என்றால் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுக்கும் போட்டிகள் நடத்த நாட்கள் கிடைக்கும். அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட இருதரப்பு போட்டிகள் அல்லது வேறு ஏதேனும் செய்ய முடியும். உலகக்கோப்பை குறித்த முடிவு ஐபிஎல்-லுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் திட்டமிட அவசியம் என்றார் அருண் துமால்.


Click it and Unblock the Notifications