“வைபவ் சூர்யவன்ஷி ஒரு குழந்தை தொழிலாளி”.. கொந்தளித்த ரசிகர்கள்.. புகார் அளித்தது தவறு என வாதம்
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, இப்போது ஒரு விசித்திரமான சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். மைதானத்தில் பவுண்டரிகளைத் துரத்திய இவரை, இப்போது காவல் நிலையம் வரை இழுக்க ஒரு சமூக ஆர்வலர் முயற்சி செய்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி மீது கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.எம்.சிவகுமார் நாயக் என்பவர் புகார் அளித்துள்ளார். வணிக ரீதியான ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் 18 வயதுக்குட்பட்ட சிறுவனை விளையாட அனுமதிப்பது "குழந்தை தொழிலாளர்" சட்டத்திற்கு எதிரானது என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வைபவ் மற்றும் ஐபிஎல் நிர்வாகம் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகவல் வெளியானதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர். "திறமைக்கு வயது கிடையாது; ஒரு சிறுவன் தனது திறமையால் ஒரு இடத்தை எட்டும்போது அதை வாய்ப்பு என்று சொல்ல வேண்டுமே தவிர, சுரண்டல் என்று சொல்லக் கூடாது" என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பார்த்திவ் படேல் போன்ற ஜாம்பவான்கள் மிகச் சிறிய வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தபோது எழாத இந்த சர்ச்சை, இப்போது ஏன் எழுகிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்ட ரீதியாகப் பார்த்தால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2020 ஆம் ஆண்டில் ஒரு புதிய விதியைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் குறைந்தது 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வைபவ் சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயது முடிந்துவிட்டதால், அவர் விளையாடுவதில் சர்வதேச விதிகளின்படி எந்தத் தடையும் இல்லை. மேலும், இது போன்ற உள்ளூர் டி20 லீக் போட்டிகளுக்கு அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களே முடிவெடுக்கலாம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு சூறாவளியாகவே வலம் வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 40 சராசரியுடன் 400 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 237 என்பது மலைக்க வைக்கும் விஷயமாகும். ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் இவரைப் போன்ற இளம் திறமைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, சட்டச் சிக்கல்களில் இழுப்பது சரியானதல்ல என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
