புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் 367 ரன்கள் அடித்து நாட் அவுட் ஆக இருந்தபோது, தென்னாப்பிரிக்க அணியின் தற்காலிகக் கேப்டனாக இருந்த அவரே டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
அப்போது தென்னாப்பிரிக்கா அணி 626 ரன்கள் எடுத்திருந்ததால் அவர் இந்த முடிவை எடுத்தார். எனினும், அவர் இன்னும் 34 ரன்கள் எடுத்திருந்தால் பிரையன் லாராவின் பிரம்மாண்ட டெஸ்ட் சாதனையான 400 ரன்களை முந்தி இருப்பார். ஆனால், அந்த இலக்கை நோக்கி ஆடப்போவதில்லை என்ற முடிவை எடுத்தது, விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதை அடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் டிராவிட் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது, சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடிக்க விடாமல் டிக்ளேர் செய்த சம்பவத்தை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அன்று சச்சினுக்கு நடந்த அதே மோசமான சம்பவம் வியான் முல்டருக்கும் நடந்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் வியான் முல்டர் தான் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எனும் நிலையில், அவர் தானே டிக்ளேர் செய்தார், அப்புறம் எப்படி இது வேறொருவர் எடுத்த முடிவாக இருக்க முடியும் என சிலர் நினைக்கலாம். முல்டர் தற்காலிகக் கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா தான். ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இந்தத் தொடரின் முதல் போட்டியில் கேசவ் மகராஜ் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இரண்டாவது போட்டியில் கேசவ் மகராஜ் ஆடாத நிலையில், வியான் முல்டர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
பொதுவாக தற்காலிகக் கேப்டன்கள் களத்தில் மட்டுமே முடிவெடுப்பார்கள். மற்றபடி அணியின் முக்கிய முடிவுகளைப் பயிற்சியாளர் உள்ளிட்ட அணி நிர்வாகம்தான் முடிவு செய்யும். அந்த வகையில், இந்தப் போட்டியில் டிக்ளேர் செய்ய முடிவை ஓய்வறையில் இருந்தவர்கள் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஏனெனில், உணவு இடைவேளைக்காக வியான் முல்டர் ஓய்வறைக்குச் சென்றபோதுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீண்டும் உணவு இடைவேளை முடிந்து வரும்போது, தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. எனவே, அப்போது ஓய்வறையில் ஏதேனும் இது குறித்து விவாதம் நடந்திருக்கும். அப்போது வியான் முல்டரை டிக்ளேர் செய்ய ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம் என்ற வாதத்தை ரசிகர்கள் முன் வைக்கின்றனர்.
முன்பு 2004ஆம் ஆண்டு முல்தானில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ராகுல் டிராவிட் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அது அப்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதத்தை அடிக்க விடாமல் செய்துவிட்டார் என அப்போது விமர்சனம் இருந்தது.
அதேபோல தற்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படும் 400 ரன்கள் என்ற ஸ்கோரை வியான் முல்டர் முறியடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தபோதும், அதைச் செய்யாமல் டிக்ளேர் செய்தது விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 626 ரன்கள் என்பது மிகவும் அதிகம் தான் என்றாலும், 114 ஓவரிலேயே தென்னாப்பிரிக்க அணி அந்த ஸ்கோரை எடுத்திருந்தது. மேலும், இந்தப் போட்டியில் இரண்டாவது நாள் கூட முடியாத நிலையிலேயே தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேர் செய்தது. இன்னும் 34 ரன்கள் எடுப்பதற்கு அதிகபட்சம் 10 ஓவரைக் கொண்டு இருப்பார். இதைத்தான் ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வியான் முல்டர் 334 பந்துகளில் 367 ரன்கள் எடுத்திருந்தார். 49 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 109.88 என்பதாக இருந்தது. இந்தப் போட்டியில் பெட்டிங்ஹாம் 82 ரன்களும், டுவான் டி பிரிட்டோரியஸ் 78 ரன்களும் எடுத்திருந்தனர். வேறு எந்த தென்னாப்பிரிக்க வீரரும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.