தனியே தன்னந்தனியே ஓடிய வீரர்.. உலக தடகளப் போட்டியில் ஒரு சுவாரஸ்யம்!
லண்டன்: லண்டனில் உலக தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் அதிவேக மனிதரான, உசேன் போல்டுக்கு இது கடைசி போட்டி என்பதால் பரபரப்பு ஏற்பட்டு, உலகெங்கும் இந்தப் போட்டி குறித்து தெரிந்தது. 100 மீட்டர் ஓட்டத்தில், வெண்கலத்துடன் அவர் விடைபெற்றார்.
இது ஒருபுறம் இருக்க, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தகுதி போட்டியில், வேகமாக வளர்ந்து வரும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும், போஸ்ட்வானா நாட்டின் ஐசக் மக்வாலா, தகுதிப் போட்டியில் தனியாக ஓடி, அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

200 மீட்டர் ஓட்டத்துக்கான தகுதிப் போட்டி நடப்பதற்கு, சில நிமிடங்களுக்கு முன்பு, திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால், அவர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதுபோலவே, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும் திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.
போட்டி விதிகளின்படி, தகுதிப் போட்டி முடிந்த பிறகு, 48 மணி நேரத்துக்குள் மீண்டும் களத்தில் இறங்கினால், மறு வாய்ப்பு அளிக்கப்படும்.
அதன்படி, 48 மணி நேர கெடுவுக்குள், போட்டியில் பங்கேற்க மக்வாலா தயாராகிவிட்டார். பரிசோதனைகளுக்குப் பிறகு அது உறுதி செய்யப்பட்டது. விதிகளின்படி, 200 மீட்டர் தூரத்தை, 20.53 விநாடிகளுக்குள் கடக்க வேண்டும். தனியாக களத்தில் இறங்கிய மக்வாலா, 20.20 விநாடிகளில் கடந்து, அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


Click it and Unblock the Notifications