மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் ஜிம்பாப்வே டி20 தொடருக்கு கூட தேர்வு செய்யப்படவில்லை. ரிஷப் பண்ட் காயத்தின் போது இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் இருந்தார். டி20, ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன், டெஸ்ட் அணியிலும் அறிமுகம் செய்யப்பட்டார்.
இருந்தாலும் கேஎல் ராகுலின் எழுச்சியால் இஷான் கிஷன் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேலாக இந்திய அணியுடன் பயணித்தாலும், இஷான் கிஷனுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இதனிடையே தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் விரக்தியடைந்த இஷான் கிஷன், திடீரென மனசோர்வு காரணமாக ஓய்வு தேவை என்று நாடு திரும்பினார்.

இதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன் ரஞ்சி டிராபியில் ஆடுமாறு பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார். ஐபிஎல் தொடரிலும் 14 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை மட்டுமே சேர்த்து ஏமாற்றமளித்தார். இதனால் தேர்வுக் குழு மொத்தமாக இஷான் கிஷன் புறந்தள்ளியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த ரஞ்சி சீசனுக்காக இஷான் கிஷன் தயாராகி வருகிறார். இதுகுறித்து இஷான் கிஷன் பேசுகையில், நான் சிறிய ஓய்வெடுத்து கொண்டேன். ஆனால் திடீரென பிசிசிஐ தரப்பில் விதிகள் கொண்டு வரப்பட்டது. இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க வேண்டுமென்றால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி இருக்க வேண்டும் என்பது தான்.
திடீரென ரஞ்சி கிரிக்கெட் விளையாட அறிவுறுத்தியது எனக்கு ஏற்றதாக தெரியவில்லை. அதேபோல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் மனநிலையிலும் நான் இல்லை. அதற்காக தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் ஓய்வெடுப்பதற்காக விலகினேன். ஓய்வு காலத்தில் கூட உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த சொல்வது கொஞ்சம் கூட சரியாகப்படவில்லை.
அதற்கு நான் சர்வதேச கிரிக்கெட்டையே விளையாடி இருப்பேனே என்று தோன்றியது. பெஞ்சிலேயே நீண்ட நாட்களாக இருந்து மனசோர்வை ஏற்படுத்தியது. எல்லாமே சரியாக இருந்தது என்று சொல்ல விரும்பவில்லை. அந்த பயணம் எனக்கு எளிமையாக இல்லை. ஏனென்றால் நான் சிறப்பாக விளையாடிய போது, பெஞ்சில் அமர வைக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.