டெல்லி: 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது குரூப் ஏ போட்டிக்கு முன்னதாக இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் காயமடைந்துள்ளார். இந்தியாவின் வலைப்பயிற்சியில் காலில் அடிபட்டதையடுத்து, வலியுடன் தரையில் கிடக்கும் இஷானை மருத்துவ குழுவினர் பரிசோதிக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜஸ்பிரித் பும்ராவின் 'டோ-கிரஷிங் யார்க்கர்' பந்து 27 வயதான இஷான் கிஷனின் காலில் பட்டதால், காயம் ஏற்பட்டது. பிசிசிஐ இந்த குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. ஏற்கனவே அபிஷேக் சர்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், இசான் கிஷனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் குரூப் ஏ போட்டியில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக களமிறங்கினார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அமெரிக்காவிற்கு எதிராக பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற ஆட்டத்தில், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடிய இஷான், 16 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார். நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு அவர் உடல்தகுதி பெறுவார் என அணி நிர்வாகம் நம்புகிறது.
டி20 உலகக் கோப்பை 2026இன் 18வது போட்டிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் நிலை குறித்து திலக் வர்மா அப்டேட் ஒன்றை தந்தார். பும்ரா நமீபியா ஆட்டத்திற்குத் தயாராக இருந்தாலும், போட்டிக்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று திலக் கூறினார். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிஷேக், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் உள்ளார்.
அபிஷேக் குறித்த தகவல்கள் பற்றி டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திலக் வர்மா கூறுகையில், "நாங்கள் டெல்லி வந்தபோது, அபிஷேக் பரிசோதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். எனவே, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். விளையாட்டுக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது.
எனவே நாளைக்குள் (வியாழக்கிழமை) அவர் எப்படி உணர்கிறார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம், அதற்கேற்ப செயல்படுவோம்" என்றார். இந்த நிலையில், இசான் கிஷனுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கவார். ஒருவேலை அபிஷேக் சர்மாவும் இல்லை என்றால், அவருக்கு பதில் திலக் வர்மா தொடக்க வீரராக செயல்படுவார்.