மும்பை: நாளை தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியில் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டீம் டி அணியில் இஷான் கிஷன் தேர்வான நிலையில், கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துலீப் டிராபி தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், செப்.22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இம்முறை 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய 4 பேரும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டீம் டி அணியில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது மனசோர்வு காரணமாக நாடு திரும்பினார். அதன்பின் உள்நாட்டு கிரிக்கெட்டில் இஷான் கிஷனை விளையாட தேர்வுக் குழு அறிவுறுத்தியது. ஆனால் அவர் விளையாட மறுத்தார்.
இதன் காரணமாக அவர் மீது பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததோடு, பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கியது. இதனால் இஷான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவதை தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை உருவானது. பின்னர் தேர்வுக் குழுவினர் அட்வைஸாக் துலீப் டிராபியில் விளையாட ஒப்புக் கொண்டார்.
இதற்கு முன் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட புச்சி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் களமிறங்கினார். முதல் போட்டியில் அதிரடியாக சதம் விளாசினாலும், 2வது போட்டியில் சொதப்பலாக ஆடி ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். இதன் காரணமாக ஜார்க்கண்ட் அணி முதல் சுற்றுப் போட்டிகளுடன் வெளியேறியது. இந்த நிலையில் இஷான் கிஷன் துலீப் டிராபியில் கவனம் செலுத்தினார்.
இந்த நிலையில் நாளை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான டீம் சி அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டீம் டி அணி விளையாடவுள்ளது. ஆனால் இஷான் கிஷன் நாளை நடக்கவுள்ள போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. இஷான் கிஷன் விலகியதற்கான காரணம் கூறப்படவில்லை என்றாலும், காயம் காரணமாக விலகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இவருக்கு பதிலாக டீம் டி அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ், ரவீந்திரா ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் உள்ளிட்ட ஏராளமானோர் விலகியிருக்கின்றனர். இவர்களுக்கான மாற்று வீரர்களை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.