மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் இசான் கிஷன் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ரிஷப் பண்ட் காயம் அடைந்த நிலையில், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
இதனை அடுத்து டெஸ்ட்,ஒரு நாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இசான் கிஷன் விளையாடி வந்தார். 2023 உலக கோப்பை தொடரிலும் இசான் கிஷன் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில், மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி அணியிலிருந்து விலகிய இசான் கிஷன் பல்வேறு பார்ட்டியில் பங்கேற்றது பிசிசிஐயை கடுப்படைய செய்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடுங்கள் என பிசிசிஐ அறிவுறுத்தியும் இசான் கிஷன் அதை கேட்கவில்லை. கடைசியாக இசான் கிஷன், இந்திய அணிக்காக நவம்பர் மாதம் 28ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 போட்டி ஒன்றில் விளையாடினார்.
அதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. தற்போது இஷான் கிஷன் மீண்டும் அணியில் இடம் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடினார்.தற்போது துலீப் கோப்பை தொடரில் இசான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் இசான் கிஷன், துலீப் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது இசான் கிஷனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கிடைத்த வாய்ப்பையும் வீணடித்து விட்டார்.
இந்த சூழலில் துலீப் கோப்பை தொடரின் முதல் சுற்றிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இசான் கிஷன் பெங்களூருவில் உடல் தகுதியை பெற தீவிர முயற்சி செய்து வருவதாகவும், அடுத்த மாத தொடக்கத்தில் 100% உடல் தகுதியை எட்டி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய ஏ அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இஷான் கிஷன் முக்கிய பங்கு வகிக்க போவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.