இஷான் கிஷன் செய்த தவறு.. 2 பேட்ஸ்மேன்கள் ஒரே பக்கம் நின்றும் ரன் அவுட் செய்யலை.. என்ன நடந்ததது?
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், விக்கெட் கீப்பிங்கின் போது செய்த மோசமான ரன்-அவுட் தவறு ரசிகர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணியின் ரன் சேஸின் போது, சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசிய 15வது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்தச் சம்பவம் நடந்தது. ஜிம்பாப்வே பேட்டர் தாடிவனாஷே மருமானி பந்தை தட்டிவிட்டு ஓட முயன்றார். ஆனால் எதிர்முனையில் இருந்த நியூமேன் நயம்ஹுரி வேகமாக ஓடிவந்ததால், இரு பேட்டர்களும் ஒரே முனையில் வந்து நின்றனர். இதனால் கீப்பர் முனையில் பேட்ஸ்மேன் இல்லாத நிலை இருந்தது. அப்போது எளிதான ரன் அவுட் வாய்ப்பு இருந்தது.

பந்து கையில் கிடைத்தும் இந்த குழப்பத்தைக் கவனிக்காத இஷான் கிஷன், பந்தை ஸ்டம்பில் அடிக்காமல் பிட்சின் நடுவே மெதுவாக உருட்டி விட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகே பேட்டர்கள் இருவரும் ஒரே முனையில் நிற்பதை உணர்ந்த இஷான் கிஷன், தலையில் கை வைத்து ஏமாற்றத்துடன் நின்றார். மிகவும் எளிதாகச் செய்திருக்க வேண்டிய ரன்-அவுட்டை அவர் கோட்டை விட்ட இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த ரன் அவுட் வாய்ப்பு பறிபோன போது ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்களை இழந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதனால் பெரிய பாதிப்பு இன்றி இந்திய அணி தப்பியது. இந்த தவறை செய்த இஷான் கிஷன் பேட்டிங்கில் துவம்சம் செய்திருந்தார்.
இஷான் கிஷன் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் விளாசி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து திலக் வர்மா 60 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவர்களில் 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதால், இஷான் கிஷனின் இந்த வினோதமான தவறு அணியின் வெற்றியைப் பாதிக்காமல், ஒரு நகைச்சுவை நிகழ்வாக மட்டுமே முடிந்தது.


Click it and Unblock the Notifications
