மிஸ்ஸான சூப்பர் சதம்.. இஷான் கிஷான் எதார்த்தமாக கூறிய வார்த்தைகள்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி - விவரம்
ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டி குறித்து இஷான் கிஷான் கூறிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278/7 ரன்களை குவிக்க, இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282/3 ரன்களை குவித்து வெற்றி கண்டது.

இந்திய அணி வெற்றி
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷான் ஜோடி தான். 48/2 ரன்கள் என தடுமாறிய போது ஜோடி சேர்ந்த இவர்கள் 3வது விக்கெட்டிற்கு 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 113 ரன்கள் விளாசினார். ஆனால் இஷான் கிஷானால் தான் துரதிஷ்டவசமாக சதமடிக்க முடியவில்லை.

இஷான் கிஷான் சதம்
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 84 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 93 ரன்களை விளாசினார். சதத்திற்கு அருகில் நெருங்கிய போது எதிர்பாரதவிதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும் வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்த அவர் கம்பேக் கொடுத்ததற்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இஷான் கிஷான் பேச்சு
இந்நிலையில் சதம் தவறியது குறித்து இஷான் கிஷான் பேசியுள்ளார். அதில், அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இது எனது சொந்த ஊர் மைதானம் என்பதால் நான் ஃபீல்டிங் செய்யும் போதே, சதமடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரினர். அதற்காக மிகவும் போராடினேன். எனினும் தவறிவிட்டது. இதற்காக கவலை இல்லை, அடுத்த போட்டியில் இதை விட சிறப்பாக விளையாடலாம்.

என்ன ப்ளான்
ராஞ்சியில் விளையாடுவது சாதாரணம் அல்ல. இங்கு புதிய பேட்டர்கள் தாக்குப்பிடிப்பது கடினமாகும். ஒரு சில பந்துகள் மிக மெதுவாக வருகின்றன, ஒரு சில பந்துகள் மிக வேகமாக வருவதால் கணிக்க முடியவில்லை. இதனால் முன்கூட்டியே ஷாட்களை தீர்மானித்து வைத்திருக்க கூடாது என முடிவெடுத்தேன். பந்து உடலுக்கு அருகில் வந்த பின்னர் தான் பேட்டை நகர்த்த வேண்டும் என்றே முடிவெடுத்தேன். அது கைக்கொடுத்துள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் ஆட ஆவலுடன் உள்ளேன் என இஷான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications