மும்பை : 2023 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஒரு போட்டியில் கூட ஆடுவது சந்தேகம் தான்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களே இவர்கள்தான். அதைத் தொடர்ந்தே இந்திய அணியில் அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கூறினர்.

அதன் பின்னரே இஷான் கிஷன் முதலில் தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அணியில் இணைந்தார்.
இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் அவர் மாற்று விக்கெட் கீப்பர் என்ற அளவிலேயே அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது அணியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவரது பேட்டிங் ஃபார்மும் சிறப்பாக இருப்பதால் இப்போதைக்கு அவரை தாண்டி இஷான் கிஷன் அணியில் இடம் பிடிப்பது கடினம்.
அதே போல, சூர்யகுமார் யாதவ் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் டி20 அணியில் தன் அதிரடி ஆட்டத்தால் இடத்தை உறுதி செய்து கொண்டார். ஆனால், ஒருநாள் போட்டி அணியில் சூர்யகுமார் இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் மாற்று வீரராக மாறி போட்டிகளின் போது வெளியே அமர வைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது மோசமான
ஃபார்ம் காரணமாகவே உலகக்கோப்பை போட்டிகளில் அவர் களமிறங்குவது கடினம்.
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் இருவரும் போட்டிகளில் ஆட வேண்டும் என்றால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அது நடக்கும்.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ராகுல் காயத்தால் ஆட முடியாமல் போனால், இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்ற வகையில் அணியில் இடம் பெறுவார்.
ஸ்ரேயாஸ் அல்லது பாண்டியா காயமடைந்தால் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பாண்டியா போல தேவையான நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆட சூர்யகுமார் யாதவ் தான் சரியான தேர்வாக இருப்பார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் முதன்மை வீரராக இருந்தவர்கள். மேலும், அந்த அணியின் பல முக்கிய ஐபிஎல் போட்டி வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்கள். ரோஹித் சர்மாவுக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாறாத வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே.
ஆனாலும், உலகக்கோப்பை தொடரில் மற்ற வீரர்களின் காயத்தை வைத்தே அவர்களால் போட்டிகளில் ஆட முடியும் என்ற நிலையே உள்ளது. சூர்யகுமார் யாதவ் பல முறை போட்டிகளில் ஆட முடியாததை குறித்து பேட்டிகளில் புலம்பி இருக்கிறார். இரு வீரர்களுமே இந்த விஷயத்தில் நொந்து போயிருப்பார்கள்.