மும்பை: ஐபிஎல் தொடரில் இந்திய இளம் நட்சத்திர வீரரான இஷான் கிஷனுக்கு மிகப்பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. இஷான் கிஷனை டிரேடிங்கில் வாங்குவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை மற்றும் கேகேஆர் ஆகிய 3 அணிகளும் வரிசையில் நிற்கின்றன. இந்த 3 அணிகளுக்கு இஷான் கிஷனின் தேவை அத்தியாவசிய ஒன்றாக மாறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் ஐதராபாத் அணி தரப்பில் நட்சத்திர இளம் வீரர் இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் கடந்த சீசனில் இஷான் கிஷன் பெரிதாக ஜொலிக்கவில்லை. என்னதான் சதங்களை விளாசினாலும், இஷான் கிஷனிடம் கன்சிஸ்டன்சி இல்லாதது மிகப்பெரிய விவாதமாக மாறியது. இதனால் இஷான் கிஷனை கழற்றிவிடலாம் என்று ஐதராபாத் அணி நிர்வாகம் கருதுகிறது.

அவருக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என்று காவ்யா மாறன் முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில் இஷான் கிஷனை விடுவிக்கும் முடிவில் இருந்தால், டிரேடில் வாங்கிக் கொள்கிறோம் என்று 3 அணிகள் காவ்யா மாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜஸ்தான், மும்பை மற்றும் கேகேஆர் ஆகிய 3 அணிகளே இஷான் கிஷனை வாங்க முயற்சித்து வருகிறது.
ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அந்த அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்துவிட்டார். அவரை டிரேடில் வாங்க முயற்சிகள் நடந்தாலும், ராஜஸ்தான் அணி மிகப்பெரிய டிமாண்ட் வைத்ததால், பலரும் பின்வாங்கிவிட்டனர். இதனால் சஞ்சு சாம்சனின் இடத்தை இஷான் கிஷனை வைத்து நிரப்ப ராஜஸ்தான் முடிவு செய்து, காவ்யா மாறனை அணுகி இருக்கிறது.
அதேபோல் மும்பை அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிக்கல்டன் கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டாலும், ரோகித் சர்மா இந்த சீசனோடு ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரோகித் சர்மாவின் இடத்தில் இஷான் கிஷனை கொண்டு வந்தால், வெளிநாட்டு வீரர்களில் சிலருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கணக்கு போட்டிருக்கிறது.
அதேபோல் கேகேஆர் அணியின் நீண்ட காலமாக விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரி செய்யவே சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஆனால் ராஜஸ்தான் அணி இறங்கி வரவில்லை. இதனால் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷனை வாங்கிவிடலாம் என்று கேகேஆர் அணி கணக்கு போட்டுள்ளது.
ஆனால் காவ்யா மாறன் எந்த அணிக்கு டிரேட் செய்ய உள்ளார் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. இதற்கு முன்பாக ஆர்சிபி அணியிடம் இருந்து ஒரு முறை ஐதராபாத் அணி டிரேட் செய்திருந்தது. இதனால் இஷான் கிஷனை பணத்திற்காக டிரேட் செய்யும் முடிவை காவ்யா மாறன் எடுப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.