ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், அவுட் ஆகாத போதும் தான் கேட்ச் கொடுத்துவிட்டதாக நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது யாருமே அவுட் என அப்பீல் கேட்காத நிலையில் அம்பயர் அந்த பந்துக்கு அவுட் என அறிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.
ஃபீல்டிங் செய்யும் அணியைச் சேர்ந்த யாரோ ஒருவர் அவுட் என அப்பீல் செய்தால் மட்டுமே, அம்பயரால் அவுட் என அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலும், அது அம்பயருக்குத் தெரிந்தாலும் ஃபீல்டிங் செய்யும் அணியைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வீரர் அவுட் என அப்பீல் செய்தால் மட்டுமே, அம்பயரால் அவுட் என அறிவிக்க முடியும்.

இது ஐசிசி விதிகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும், ஒரு பேட்ஸ்மேன் தவறாக அவுட் என நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினால், அம்பயர் அவரைத் தடுத்து நிறுத்தி மீண்டும் ஆடுகளத்துக்கு அழைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த இரண்டு விஷயங்களும் இந்தப் போட்டியில் நடக்கவில்லை. இஷான் கிஷன் விவகாரத்தில் என்ன நடந்தது என முழுமையாக பார்க்கலாம்.
நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன், தீபக் சாகர் ஓவரில் தான் சந்தித்த நான்காவது பந்தில் விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கெல்ட்டனிடம் கேட்ச் கொடுத்ததாக நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது அம்பயர் அந்த பந்துக்கு வைட் என அறிவிக்க தனது கையை அகலமாக காட்ட வந்தார்.
அதற்குள் இஷான் கிஷன் தான் அவுட் ஆனதாக ஆடுகளத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். அதைப் பார்த்த அம்பயர் சில வினாடிகளிலேயே தனது வைட் சிக்னலை மாற்றி அவுட் என அறிவித்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த யாரும் அப்பீல் செய்யவில்லை என்பதுதான் இதில் சர்ச்சையாக மாறி உள்ளது. அம்பயர் அவுட் என அறிவித்த பிறகு பந்துவீச்சாளரான தீபக் சாஹர் ஒரு சம்பிரதாயத்துக்காகக் அவுட் என அப்பீல் செய்தார்.
மேலும், அந்த பந்து வைட் என அம்பயர் கருதிய நிலையில், இஷான் கிஷன் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய போது, நியாயமாக அவர் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அதன் பிறகு ஃபீல்டிங் செய்யும் அணி அவுட் என அப்பீல் செய்திருந்தால், அப்போது மூன்றாவது அம்பயரின் உதவியை நாடி இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே நேற்றைய போட்டியில் நடக்கவில்லை. இதை பார்த்த ரசிகர்கள், அம்பயர் மற்றும் இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடந்து கொண்டதாகச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
நேற்றைய போட்டியில் இஷான் கிஷன் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை மும்பை இந்தியன்ஸ் 15.4 ஓவர்களில் எல்லாம் எட்டியது.