சென்னை : இந்திய அணியில் மாற்று வீரராக இருந்த இஷான் கிஷனுக்கு உலகக்கோப்பை தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு ஜாக்பாட்டாக அடித்துள்ளது.
இந்திய அணியில் சுப்மன் கில் துவக்க வீரராக தனது இடத்தை உறுதி செய்து இருந்தார். உலகக்கோப்பை தொடரில் அவர் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் முதல் போட்டியில் ஆட முடியாது என உறுதியாகி இருக்கிறது. அதற்கு அடுத்த போட்டிகளிலும் அவரால் ஆட முடியுமா? என தெரியவில்லை.

இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு பதிலாக இந்திய அணியில் துவக்க வீரராக ஆட தகுதியான வீரர் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் மட்டுமே. ஆனால், மிடில் ஆர்டரில் நம்பகமான பேட்ஸ்மேன் தேவை என்பதால் கே எல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் இறங்குவார். அதை மாற்றுவது இந்திய அணிக்கு ஆபத்தாக மாறலாம்.
எனவே, இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறக்கவே ரோஹித் சர்மா விரும்புவார். அவர் ஏற்கனவே, துவக்க வீரராக இரட்டை சதமும் அடித்து இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரிலும் அவர் துவக்க வீரராக சிறப்பாக ஆடி இருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளது. அந்தப் போட்டியில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்துக்கு பின் இந்திய அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் துவக்க வீரர்களாகவும், அவர்களை தொடர்ந்து விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் களமிறங்குவார்கள்.
சுப்மன் கில் மீண்டும் அணியில் இணைந்த பின் இஷான் கிஷன் மீண்டும் மாற்று வீரராக ஆக வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.