2 முறை விதி மீறல்... இஷாந்த் சர்மாவுக்கு 65% போட்டிக் கட்டணம் அபராதம்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தின்போது 2 முறை நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்தியப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 65% போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் இந்தியா, இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் நான்காவது நாள் ஆட்டமான நேற்று இஷாந்த் சர்மா பந்து வீசியபோது 2 முறை விதிமுறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாக போட்டி நடுவருக்கு புகார் போனது.
இதையடுத்து இஷாந்த் சர்மாவுக்கு 65 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

லெவல் 1
வீரர்களுக்கான ஐசிசி நடத்தை விதிமுறை 2.1.7ன் லெவல் ஒன் கீழ் இஷாந்த் சர்மா விதிமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விதிமுறை என்னவென்றால், சர்வதேச போட்டியின்போது ஒரு வீரர் அவுட்டாகும்போது அவரை தூண்டி விடும் வகையில், அவரை அவுட்டாக்கிய வீரர்கள் பயன்படுத்தும் வார்த்தை, செய்கைகள் ஆகியவை குறித்ததாகும்.

2 வீரர்களை அவுட்டாக்கியபோது சவுண்டு
இஷாந்த் சர்மா, தனது பந்து வீச்சின்போது முதலில் லஹிரு திரிமன்னேவை அவுட்டாக்கியதும் அவரைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அடுத்து 3 ஓவர்கள் கழித்து தினேஷ் சண்டிமால் அவுட்டானபோதும் அதேபோல அவரை தூண்டும் வகையில் செயல்பட்டதாக புகார் கூறப்பட்டது.

முதல் வீரருக்கு 15.. 2வது வீரருக்கு 50
திரிமன்னேவை தூண்டி விட்டதற்காக 15 சதவீத போட்டிக் கட்டணமும், சண்டிமாலை தூண்டி விட்டதற்காக 50 சதவீத போட்டிக் கட்டணம் என மொத்தமாக 65 சதவீத போட்டிக் கட்டணம் இஷாந்த் சர்மாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது அதுக்கும் மேல
இந்த அபராதத்தை அறிவித்த போட்டி நடுவரான ஆண்டி பைகிராப்ட் கூறுகையில், முதல் சம்பவத்தை விட 2வது சம்பவம் சற்று மோசமானதாக உள்ளது. எனவேதான் அதற்கு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தப்புத்தான் தப்புத்தான்
நேற்றைய போட்டி முடிவில் தான் நடந்து கொண்ட முறை தவறுதான் என்று இஷாந்த் சர்மா ஒப்புக் கொண்டார். அபராதத்தையும் ஏற்பதாக அவர் அறிவித்தார். இஷாந்த் சர்மாவின் விதி மீறல் குறித்து கள நடுவர்களான ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட், ராட் டக்கர், மூன்றாவது அம்பயர் ருசிரா பல்லியகுருகே ஆகியோர் புகார் அளித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications