சென்னை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்த் ஷர்மா தனது 300வது விக்கெட்டை இன்று பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கான எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 350 தாண்டி முன்னிலையில் சென்றுக் கொண்டிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்களும், இந்தியா 337 ரன்களும் எடுத்துள்ளன.
தற்போது இங்கிலாந்து தனது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் டேனியல் லாரன்ஸ் 18 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்தின் 300வது டெஸ்ட் விக்கெட்டாகும். 2007ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார் இஷாந்த்.
தனது 98வது போட்டியில் 300வது விக்கெட்டை கைப்பற்றியிருக்கும் இஷாந்த், இந்திய 300 விக்கெட்ஸ் கிளப்பில் இணைந்துள்ளார்.
இதன் மூலம், இந்திய அணியில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6வது பவுலராகவும், 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
முன்னதாக அஷ்வின் 54 போட்டிகளில் இந்த 300 மார்க் எனும் சாதனையை படைத்திருந்தார். கும்ப்ளே (66), ஹர்பஜன் (72), கபில் (83), ஜாகீர் கான் (89) போட்டிகளிலும் தங்களது 300வது விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.