சௌதாம்ப்டன் : இந்தியா 4வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. அதன் காரணமாக தொடரையும் இழந்துள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த சொதப்பலால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என எடுத்துக் கொண்டாலும், வேறு ஒரு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அந்த காரணம் தான் இந்த போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது என்றே கூறலாம். அதன் காரணகர்த்தா இஷாந்த் சர்மா. அவர் செய்த காரியத்தை பயன்படுத்திய மொயீன் அலி ஒன்பது விக்கெட்கள் வீழ்த்தி இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.
இஷாந்த் சர்மா முதல் இன்னிங்க்ஸில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது ஆடுகளத்தில் ஓடியதால், அங்கே சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டது. அதன் காரணமாக அந்த இடத்தில் பந்து படும்போது திரும்ப துவங்கியது.
குறிப்பாக, சுழல் பந்துவீச்சில் அது நன்றாக வேலை செய்தது. அதை பயன்படுத்திய மொயீன் அலி, இரண்டு இன்னிங்க்ஸிலும் அதை பயன்படுத்தினார். இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அதே சமயம், அஸ்வின் அதை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆக மொத்தத்தில், தான் நன்றாக பந்துவீச வேண்டும் என ஆக்ரோஷமாக ஓடி வந்து பந்து வீசிய இஷாந்த் சர்மா, இந்தியாவுக்கு வேட்டு வைத்துள்ளார்.
ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் பலரும் வெற்றிக்கு மொயீன் அலியை பாராட்டியும், தோல்விக்கு அஸ்வினை குற்றம் சாட்டியும் வருகிறார்கள். ஒருவகையில் இவர்களின் நிலைமைக்கு காரணம் இஷாந்த் சர்மாதான்.