கான்பூர்: இந்திய வேகப் பந்து வீசசாளர் இஷாந்த் சர்மாவுக்கு சிக்குன்குன்யா வந்திருப்பதால் அவர் 22ம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு முக்கியப் பின்னடைவாக இஷாந்த் சர்மாவுக்கு சிக்குன்குன்யா வந்து தற்போதுதான் தேறி வருகிறார். எனவே அவர் முதல் போட்டியில் இடம் பெற மாட்டார் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்குப் பதில் வேறு வீரர் அணியில் சேர்க்கப்பட மாட்டார். மீதம் உள்ள 14 வீரர்களிலிருந்து விளையாடும் 11 பேரை தேர்வு செய்யப் போவதாக கும்ப்ளே கூறியுள்ளார்.
72 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இஷாந்த் சர்மா 209 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவும், நியூசிலாந்தும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டியானது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டி என்பது விசேஷமானது.
இஷாந்த் சர்மா தவிர இந்திய அணியில் முகம்மது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.