அகமதாபாத் : ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த இஷாந்த் சர்மா தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி 18 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் இஷாந்த் சர்மா, நேற்று சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியை வீழ்த்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ராகுல் திவாட்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் நின்றனர்.

எனினும் இஷாந்த் சர்மா கடைசி ஓவரில் ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுகுறித்து பேசிய இஷாந்த் சர்மா, இது என்னுடைய தொடர் பயிற்சிக்கு கிடைத்த வெற்றி. நான் ஓயிடு யாக்கர்களை பயிற்சியின் போது அதிகமாக வீசி பழகினேன். கடைசி ஓவரில் என்னுடைய திறமையை நம்பி நான் பந்து வீசினேன். என்னுடைய பயிற்சியாளர்களும் எனக்கு நன்றாக உதவினார்கள்.
போட்டிக்கு முன் தயாராக அதற்காக கடுமையாக உழைத்தேன். சில பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று நமக்கு தெரிய வேண்டும். அதன் பிறகு நம்மை நாமே நம்ப வேண்டும். நம்மை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது குறித்து எல்லாம் யோசிக்க கூடாது. ஒவ்வொரு முறையும் பந்து வீசும் போது நம்முடைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ராகுல் திவாட்டியாவுடன் நான் அதிக முறை கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவருக்கு நான் எப்படி பந்து வீசினால் அடிப்பார் என்று தெரியும். எனவே அவரை ஏமாற்றும் வகையில் பந்தை வீச தொடங்கினேன். டெல்லி அணிக்காக வெற்றி பெற்று கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த போட்டியில் வென்ற உத்வேகத்தை தொடர்ந்து நாங்கள் மற்ற போட்டிக்கும் கொண்டு சென்று வெல்ல வேண்டும். இன்னும் எங்களுக்கு நேரம் இருக்கிறது. எதிர்காலத்தில் வருங்காலத்தில் நாங்கள் இதேபோன்று சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன் என இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.