கவுகாத்தி : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 86வது நாள் ஆட்டம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்லெட்டிக் ஸ்டேடியத்தில் வியாழனன்று நடக்கிறது.
இந்த சீசனில் இதுவரை 16 மேட்சுகள் ஆடி 13 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ள நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, 17 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தில் உள்ள ஹைதராபாத் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.
ISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி!
நார்த் ஈஸ்ட் யுனைடெட்டும், ஹைதராபாத் எஃப்சியும் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் இருப்பதால், இந்தப் போட்டி இந்த சீசனில் கடைசி இடத்தில் இடம்பெறுவதை தவிர்க்க இரண்டு அணிகளுக்கிடையே நடக்கும் பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
தனது கடந்த ஆட்டத்தில் ஒடிஷா எஃப்சியிடம் புபனேஸ்வரில் 2- 1 என்ற கோல் கணக்கில் தோற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, தனது சொந்த மண்ணில் ஹைதராபாத் எஃப்சியை எதிர்கொள்வதால் சற்றே தெம்புடன் உள்ளது.
தன்னுடைய அணியின் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை தராமல் இருப்பதும், நம்பிக்கை அளிக்கும் வீரர்கள் அணியை விட்டு வெளியே இருப்பதும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியின் இடைக்கால கோச் காலித் ஜமீலுக்கு வருத்தம் தரும் விஷயம் தான். ஜோஸ் லுடோ, வாய்ன் வாஸ் மற்றும் ரெடீம் டிலாங் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிகில் கடாம், மிஸ்லாவ் கோமோர்ஸ்கி மற்றும் புரோவாத் லக்ரா ஆகியோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இருப்பினும், கல்லேகோ மற்றும்
லாலங்க்மாவியா ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
காலித் ஜமீல் கூறுகையில், "ஹைதராபாத் எஃப்சியை பற்றி நாங்கள் நினைக்கவே இல்லை. எங்கள் சொந்த மண்ணில் 3 புள்ளிகள் எடுப்பதே எங்கள் லட்சியம். அணியில் இல்லாதவர்களை பற்றி பெரிதாக கவலைப்பட முடியாது. சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை," என்கிறார்.
12 ஆட்டங்களுக்கு முன் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி தான் இந்த சீசனில் இது வரை நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கடைசி வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாம்ஷெட்பூர் எஃப்சிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற தன்னுடைய கடந்த ஆட்டத்தை சமனில் முடித்த ஹைதராபாத் எஃப்சி, மோசமான அணி என்னும் பெயர் எடுப்பத்தை தடுக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்றே நம்பலாம்.
கோல்களை இது வரை எதிரணியினருக்கு வாரி வழங்கியுள்ளது அந்த அணியின் கோச் ஜேவியர் லோபஸ்ஸுக்கு கவலை அளிக்கிறது. சமீபத்தில், ஹைதராபாத் எஃப்சி, சவ்விக் சக்ரபர்த்தி மற்றும் ஹிதேஷ் ஷர்மா ஆகிய வீரர்களை அணியில் சேர்த்தது. அஜய் சேத்ரி, அடில் கான் மற்றும் அபிஷேக் ஆகியோரும் அணியில் உள்ளனர். ஆனால், மாதியூ கில்களோன் மற்றும் கோல் கீப்பர் கமல்ஜித் சிங் அணியில் இல்லை.
ஜேவியர் லோபஸ் கூறுகையில், "இந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை என்பது உண்மை தான். வீரர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டு இருக்கிறோம். மும்பை சிட்டி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களை நாங்கள் சமன் செய்துள்ளோம். எனவே எங்களை மோசமான அணி என்று சொல்லி விட முடயாது. இந்த ஆட்டத்தில் மூன்று புள்ளிகளை பெறுவது தான் அணியில் உள்ள அனைவரது நோக்கமாகும்," என்கிறார்.
அவப்பெயரை தவிர்த்து வெற்றி வாகை சூடப்போவது நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியா, ஹைதராபாத் எஃப்சியா?
Photos Courtesy : ISL Media