சென்னை: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.
8 அணிகள் இடையிலான முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் உற்சாகமாக ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணிக்கு 9வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை சென்னை நட்சத்திர வீரர் இலனோ புளுமர் சுலபமாக கோலாக்கினார்.
இதன்பிறகு 26வது நிமிடத்தில் சென்னை வீரர் இலனோ தூக்கியடித்த ஷாட்டை, ஜிஜி லால்பெகுலா (இந்தியர்) எளிதாக கோலுக்குள் திருப்பினார். தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடி கோல் மழை பொழிந்தனர். 41வது நிமிடத்தில் 'பிரீகிக்' வாய்ப்பில் இலனோ பந்தை அடிக்க அதை மும்பை கோல் கீப்பர் சுப்ரதாபால் தடுத்து விட்டார். ஆனால் பந்து அவரது கையை விட்டு சற்று விலகி வந்த போது, மற்றொரு சென்னை வீரர் மென்டோஜா வலேன்சியா (கொலம்பிய நாட்டவர்) கோலாக மாற்றினார். அடுத்த 3வது நிமிடத்தில் வலேன்சியா இன்னொரு கோல் அடித்தார்.
முதல் பாதியில் சென்னை அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் சென்னையின் ஆதிக்கம் தொடர்ந்தது. 69வது நிமிடத்தில் சென்னை வீரர் இலனோ, 'பிரீகிக்' வாய்ப்பில் பிரமாதமான ஒரு ஷாட் அடித்து கோல் போட்டார். 5 மும்பை வீரர்கள் மற்றும் கோல் கீப்பரை ஏமாற்றி பந்து வலைக்குள் நுழைந்த விதம், ரசிகர்களை பரவசப்படுத்தியது.
சென்னை வீரர்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன மும்பை அணி கடைசி கட்டத்தில் (87-வது நிமிடம்) ஆறுதல் கோல் (அடித்தவர் நபி) போட்டது. முடிவில் சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
4வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி 9 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அட்லெடிகோ டீ கொல்கத்தா 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 4வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 3வது தோல்வியாகும்.
இன்றிரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் சந்திக்கின்றன.

சென்னை அணி வீரர் இலனோ புளுமர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். இந்த ஆட்டத்தையும் சேர்த்து அவரது கோல் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் அவர் முதலிடம் வகிக்கிறார்.

சென்னையின் எப்.சி. அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான டோணி, இதுகுறித்து கூறுகையில், சென்னை ரசிகர்கள் எப்போதுமே எங்களை ஏமாற்றியது கிடையாது. கால்பந்தாட்டத்திற்கும் அரங்கு நிரம்பிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆட்டம் முழுவதிலும் அவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினர் என்றார்.