கொல்கத்தா : ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்க உள்ளது.
இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியும், கொல்கத்தாவின் ஏடிகே அணியும் மோத உள்ளன.
இரண்டு அணிகளுமே கடந்த சீசனில் சரியாக செயல்படவில்லை. புள்ளிப் பட்டியலில் பின்தங்கியே இருந்தன. அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டிருக்கும் கொல்கத்தா மற்றும் கேரளா அணிகள் கடும் அழுத்தத்தில் உள்ளன.
இந்த சீசனில் தங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இரண்டு அணிகளுமே இருக்கின்றன. இதில் ஏடிகே அணி முதல் மூன்று சீசனில் இரண்டு முறை கோப்பை வென்று சாதித்துள்ளது.
அந்த முதல் மூன்று சீசனிலும் ஸ்பெயினின் முன்னணி வீரர் அட்லேடிகோ டி மாட்ரிட் அந்த அணிக்காக ஆடினார். அவர் சென்ற பின் நான்காவது சீசனில் ஏடிகே அணி 9வது இடத்தை பிடித்து அதிர்ச்சி அளித்தது.
மறுபுறம் கேரளா சென்ற முறை முதல் பாதி தொடரில் மோசமாக செயல்பட்டு, இடையில் பயிற்சியாளர் மாற்றப்பட்டு ஆட்டத்தில் முன்னேறியது. எனினும், புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தை மட்டுமே பெற முடிந்தது.
சமீபத்தில் நடைபெற்ற லாலிகா தொடரின் ஒரு பகுதியில் கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி பெரிய அணிகளான மெல்போர்ன் சிட்டி மற்றும் கிரோனா எஃப்சி அணிகளை சந்தித்தது. அந்த ஆட்டங்களில் அதிக 11 கோல்களை விட்டுக் கொடுத்தாலும், தங்கள் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியது கேரளா ப்ளாஸ்டர்ஸ். அந்த நம்பிக்கையோடு இன்று ஐந்தாவது சீசனை தொடங்க உள்ளது இந்த அணி.
இன்று மாலை 7.30 மணிக்கு இந்தியன் சூப்பர் லீகின் ஐந்தாம் சீசனின் முதல் போட்டி நடை பெற உள்ளது.