சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது சீசனின் இறுதிக்கு, நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணி ஏற்கனவே நுழைந்து விட்டது.
பைனலில் தூத்துக்குடியுடன் மோதப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முன்னதாக நடந்த லீக் போட்டிகளில், சேப்பாக் கில்லீஸ் அணி, தான் விளையாடிய, 7 போட்டிகளில், 6ல் வெற்றி, ஒன்றில் மட்டும் தோல்வி என, 12 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
லைகா கோவை கிங்ஸ் அணி, 7 போட்டிகளில், 3ல் வெற்றி, 2ல் தோல்வி என, 8 புள்ளிகள் எடுத்து புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது. லீக் சுற்றில், சேப்பாக்கம் மற்றும் கோவை அணிகள் மோதிய ஆட்டத்தில், சேப்பாக்கம் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கோவை அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 146 ரன்கள் எடுத்தது. சேப்பாக்கம் அணி, 19 ஓவர்களிலேயே, 4 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
கோவை அணியில்,கேப்டன் முரளி விஜய் மற்றும் ரவிக்குமார் ரோகித் உள்ளிட்டோர் நல்ல பார்முடன் உள்ளனர். முதல் சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சேப்பாக்கம் அணியின் கேப்டன் சதீஷ், தலைவன் சற்குணம், சாய் கிஷோர் உள்ளிட்டோர் இந்த ஆண்டு பட்டய கிளப்பிட்டிருக்காங்க. தற்போதைய நிலையில், பைனலுக்கு நுழைவதற்கு சேப்பாக் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.