தமிழக அணி வெற்றி
சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர் கடந்த 10ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதின. இதில் தமிழக அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
சிறப்பான தமிழக அணி பௌலிங்
இந்த தொடரின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக மற்றும் பரோடா அணிகள் இறுதிப்போட்டியில் மோதிய நிலையல் போட்டி மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று எதிர்ர்க்கப்பட்ட நிலையில் தமிழக வீரர்களின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் துவக்கம் முதலே பரோடா அணி திணறியது.
4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள்
குறிப்பாக தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் வீசிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பரோடா அணி வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அவர் 4 ஓவர்களின் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். இந்த தொடரில் அவர் ஆடிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருது
இந்த தொடரின் முதல் போட்டியில் விளையாடினாலும் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றுள்ளார் சித்தார்த். இதனிடையே, இந்த தொடரில் தமிழக அணி ஆடிய இறுதிப்போட்டி உள்ளிட்ட 8 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் தனது அதிரடியை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சையத் முஸ்தாக் அலி கோப்பையை இரண்டாவது முறையாக தமிழக அணி வெற்றி கொண்டுள்ளது.
கேகேஆர் அணியிலிருந்து விடுவிப்பு
இந்த தொடரில் இறுதிப்போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கப் பெற்ற சித்தார்த், தனது அதிரடியை நிரூபித்துள்ளார். கடந்த ஐபிஎல் 2020 தொடரில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் தற்போது கேகேஆர் அணியிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சித்தார்த்துக்கான மவுசு வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் எகிறும் என்று எதிர்பார்க்கலாம்.