27ம் தேதி துவக்கம்
இந்தியா -ஆஸ்திரேலியா தொடர் வரும் 27ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய அணியினர் சிட்னிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டு, அடுத்தடுத்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
குழந்தை பிறப்பிற்காக முடிவு
இதனிடையே, தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு பின்னர் நாடு திரும்பவுள்ளார் கேப்டன் விராட் கோலி. முன்னதாக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அவர் பங்கேற்று விளையாடவுள்ளார்.
ஏமாற்றம் அளிக்கிறது
இந்நிலையில் விராட் கோலி இல்லாத இந்திய டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா எளிதாக வெல்லும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இதே கருத்தையே ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் நாதன் லியான் தெரிவித்துள்ளார். விராட் கோலி இல்லாத டெஸ்ட் அணி ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
லியான் வரவேற்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசியுள்ள லியான், விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி தங்களின் முதல் குழந்தைக்காக இந்த முடிவை எடுத்துள்ளதை வரவேற்றுள்ளார். ஆயினும் உலகின் சிறப்பான வீரர்களுடன் விளையாடும் கனவு ஏமாற்றத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் இல்லை
விராட் கோலி இல்லையென்றாலும் இந்திய அணியில் புஜாரா, ரஹானே போன்ற அச்சுறுத்தும் வீரர்கள் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள லியான், விராட் இல்லையென்றால் அறைக்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து போட்டிகளிலும் விராட் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் அவர் பங்கேற்கும் முதல் போட்டியில் அவரை எளிதாக அவுட் ஆக்குவோம் என்றும் கூறியுள்ளார்.