
பாராட்டு
டோணி அளித்த பேட்டி வருமாறு: இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அதேநேரம், ஒரு மாதத்திற்கு முன்பு இதே அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். இந்த முன்னேற்றத்திற்கு, அணி வீரர்களையும், உதவி பணியாளர்களையும் பாராட்டியே தீர வேண்டும்.

காரணம் தெரியாது
நமது அணி வீரர்களில் பலரும், நடப்பு உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பில் ஈடுபட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடங்களில் இல்லாமல் போகலாம். ஆனால், வெற்றிக்கு தேவையான ரன்களை பேட்ஸ்மேன்கள் கொடுத்து வருகின்றனர். பந்து வீச்சில் நமது அணி முன்னேற வேண்டும் என்றுதான் தொடர்ந்து முயன்று வந்தோம். அது இப்போதுதான் பலன் கொடுத்துள்ளது. பந்து வீச்சில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு, ஏதாவது ஒரு காரணத்தை அறுதியிட்டு கூறிவிட முடியாது.

ரெய்னாவுக்கு பாராட்டு
கிரிக்கெட்டில் ஏகப்பட்ட தடைகள் உள்ளன. ஆனால் சிறு விஷயங்களை சரி செய்துகொண்டால், மற்ற பெரிய விஷயங்கள் தானாக நடக்கும். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தபோதும், ரோகித் ஷர்மா அபாரமாக நின்று ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. சுரேஷ் ரெய்னா இயல்பாகவே ஒரு அதிரடி வீரர். 5வது வரிசையில் இறங்கி அவர் அசத்திவருகிறார்.

அஸ்வின் மிக முக்கியம்
அஸ்வின் 10 ஓவர்கள் வீசி விக்கெட்டை எடுக்காவிட்டாலும், அவரது பங்களிப்பு அபாரமானது. ஒரு பவுலர் விக்கெட் வீழ்த்தினால்தான், அவர் சிறப்பானவர் என்ற மன நிலை இந்தியர்களுக்கு உள்ளது. ஆனால் அஸ்வின் நெருக்கடி கொடுத்து பந்து வீசியதால்தான், பிறர் பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்டு அவுட் ஆனார்கள். தொடர்ந்து 7 போட்டிகளிலும் எதிரணிகளை ஆல்அவுட் ஆக்கியது நல்ல விஷயம். இந்தியா இந்த விஷயத்தில் இப்போது நன்றாக முன்னேறியுள்ளது. இவ்வாறு டோணி கூறினார்.
கடவுளின் கை!
மேலும், சவுமியா சர்க்கார் கொடுத்த கேட்சை ஒரு கையால் பிடித்து அசத்தியது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "அது ஏதோ அதிருஷ்டத்தால் கிடைத்தது. நான் அந்த பக்கம் பாயவும், பந்து கையில் சிக்கவும் சரியாக இருந்தது. இதுபோன்ற அதிருஷ்டம் இனிவரும் போட்டிகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று டோணி கூறினார். உலக கோப்பை கால்பந்தாட்டத்தில், அர்ஜென்டினா ஜாம்பவான் வீரர் மாரடோனா கைகளில் பட்டு பந்து கோலானது. இது தவறானது என்றாலும், நடுவர்கள் கவனிக்காமல், கோல் கணக்கில் சேர்த்துவிட்டனர். எனவே, அந்த கோலை, 'கடவுளின் கை' என்று மாரடோனா வர்ணித்தார். அதேபோல டோணிக்கும் கடவுளின் கை, கைகொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications