ஒவ்வொரு பந்தையும் கேட்டுக்கேட்டு போட்ட பும்ரா.. மனதார பாராட்டிய கேப்டன் கோஹ்லி
நாக்பூர்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் பவுலர்களின் சாமர்த்தியத்தால் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது. இந்நிலையில் கடினமான சூழ்நிலையில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அணியின் கேப்டன் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது 20 ஓவர் கிரிக்கெட்டி போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா அந்த ஓவரை வீசினார். 6 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நெஹ்ரா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை பிடுங்கினார்.
இதன்மூலம் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பவுலர்கள் பும்ரா மற்றும் நெஹ்ரா அற்புதமாக செயல்பட்டார்கள் என்றார். மேலும்,

நம்பிக்கை முக்கியமானது
"நம்பிக்கை முக்கியமானது. பும்ராவும் நெஹ்ராவும் போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடினார்கள். 5 ஓவர்களில் 40 ரன்களை தடுப்பது என்பது பெரிய விஷயம். அணியின் வலுவான பாத்திரம் வெளிவந்துள்ளதில் பெருமைபடுகிறேன்.

கேட்டுக் கேட்டு பந்து போட்டார்
நெஹ்ரா அனுபவம் வாய்ந்த வீரர். அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் பும்ரா ஒவ்வொரு பந்தையும் எப்படி போட வேண்டும் என என்னை கேட்டுக் கேட்டு போட்டார்

சிக்ஸ் போனால் பரவாயில்லை
உன் திறமைகளை மீண்டும் கொண்டுவா என்றேன். சிக்ஸ் போனால் கூட பரவாயில்லை. வருத்தப்படக்கூடாது. நாளை நீ மீண்டும் எழ வேண்டும் என்றேன். இது ஒன்றும் வாழ்க்கையின் கடைசி போட்டி அல்ல என்று கூறி அவரை உற்சாகப் படுத்தினேன்.

ராகுலின் அற்புதமான ஷாட்கள்
அதேபோல் ராகுலின் ஆட்டமும் சிறப்பாக இருந்தது. பிட்ச் கடினமாக இருந்த நிலையிலும் அவர் அடித்த ஷாட்கள் அற்புதமாக இருந்தன. அவரது ஷாட்கள் அத்தனையும் அருமையாக இருந்தது. எந்தப்பக்கம் அடிக்க விரும்பினாரோ அங்கேயே பந்துகளை விரட்டினார்". இவ்வாறு ராகுலை கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டினார்.

பெங்களூரு போக காத்திருக்க முடியாது
மேலும் "பெங்களூரு தன்னுடைய இரண்டாவது வீடு அங்கு போக காத்திருக்க முடியாது. அங்கு நடைபெறும் கடைசி போட்டியில் அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு முயற்சி செய்வோம். கடைசிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் சில விஷயங்களை சரிசெய்து கொள்ள வேண்டும்". இவ்று இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

கடைசிப் போட்டி பெங்களூரில்
முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் 1- 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை ஆகி உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த இருபது ஓவர் போட்டி பெங்களூரில் வருகின்ற 1-ந்தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications