ட்ரினிடாட்: செட் பேட்ஸ்மேன்கள் இல்லாததால், நாங்கள் பெற வேண்டிய தோல்வியை இந்தியா அணி பெற்றுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை விளாசியதும், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை கொடுத்ததுமே இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பேசுகையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் முதல் போட்டியை வெற்றிபெற்று பாசிட்டிவாக தொடரை தொடங்கவே நினைப்போம். அதனை இன்று எங்கள் வீரர்கள் செயல்படுத்தியுள்ளனர். இது நாங்கள் தோல்வியடைந்திருக்க வேண்டிய போட்டிதான்.
ஆனால் இந்திய அணியில் செட் பேட்டர்கள் யாரும் கடைசி வரை இல்லை. சீரான இடைவேளையில் விக்கெட்டை பறிகொடுத்தார்கள். இதனால் கடைசி ஓவரின் போது நான் நம்பிக்கையுடன் இருந்தேன். இந்திய வீர்ரகளின் பந்துவீச்சை பார்த்த பின், நாங்கள் குறைந்த ஸ்பின்னர்களை அணியில் வைத்திருக்கிறோம் என்பது புரிந்தது. இதனால் எங்களின் திறமையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன்.
அதேபோல் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சுலபமல்ல. புதிய பந்தில் தான் ரன்களை சேர்க்க முடியும். அதேபோல் இந்தத் தொடர் இந்திய ஸ்பின்னர்களை எங்கள் பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்த அமையும். நிச்சயம் எங்களிடம் பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன்கள் இருப்பது சாதகமான அம்சமாகும். அதேபோல் இடதுகை பேட்ஸ்மேன்களான ஹெட்மயர், பூரன் மற்றும் மேயர்ஸ் ஆகியோர் அதிரடியாக ஆடுவது பெரும் மாற்றத்தை உண்டாக்கும்.
கரீபிய மண்ணில் பேட்டிங்கின் போது நல்ல தொடக்கம் கிடைப்பது கடினமானது. ஆனால் தொடக்கம் கிடைத்துவிட்டால், நிச்சயம் சிறப்பாக ரன்களை சேர்க்க முடியும். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆடுகளத்திற்கு ஏற்றமாறு பந்துவீச்சையும், லெந்தையும் மாற்றி மிரட்டினார் என்று பாராட்டு தெரிவித்தார்.