ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 33 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் விளாசியது. பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாளின் முதல் செஷனிலேயே 255 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. ஃபாலோ ஆன் கொடுக்க முடியாததால், இந்திய அணி அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டி20 கிரிக்கெட் மனநிலைக்கு இந்திய வீரர்கள் மாறினர். முதல் ஓவரிலேயே தொடங்கிய அதிரடி கடைசி வரை எங்குமே நிற்கவில்லை. ரோகித் சர்மா 57 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆட்டத்தை சுப்மன் கில் - இஷான் கிஷன் எடுத்துக் கொண்டனர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இஷான் கிஷன், ஒரு முடிவுடன் களமிறங்கினர். இந்திய அணியின் முன்னிலை 350 ரன்களை எட்டிய போது ரோகித் சர்மா வெளியில் வந்தார்.
இதனை புரிந்துகொண்ட இஷான் கிஷன் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை 33 பந்துகளில் விளாசினார். இதையடுத்து ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இதன் மூலம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 365 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. வழக்கமாக 4வது இடத்தில் விராட் கோலியே களமிறங்குவார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் களமிறக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் குழம்பினர்.

இதுகுறித்து இஷான் கிஷன் பேசுகையில், இந்த அரைசதம் மிகவும் ஸ்பெஷலானது. இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்த்தது என்று தெரியும். 4வது இடத்தில் களமிறங்க விராட் கோலியே யோசனை கூறி எனது ஆட்டத்தை வெளிப்படுத்த அறிவுரை வழங்கினார். மழை வந்ததால், கூடுதலாக அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் 370 முதல் 380 ரன்கள் வரை இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. 5ஆம் நாளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
