இறுதிப் போட்டியில் தோனி ஆட்டம்
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனியின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டது. காரணம் அவர் காட்டிய அதிரடி. அதிலும் அவர் சிக்ஸர் அடித்து கோப்பையை வென்ற விதம் இன்று வரை ரசிகர்களின் மனதை விட்டு போகவில்லை. இது தோனிக்கு முக்கியமான வெற்றி. அதேசமயம், இந்தியாவுக்கு இது 2வது உலகக் கோப்பை.
கம்பீர் சொல்வது வேறு
ஆனால் கெளதம் கம்பீர் இதை வேறு மாதிரி பார்க்கிறார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், 2011 உலகக் கோப்பையை மொத்த இந்தியாவும் இணைந்து வென்றது. மொத்த இந்திய அணியும் இணைந்து வென்றது. இதில் அனைவருக்குமே பங்குண்டு. வெறும் சிக்ஸரால் மட்டும் வந்ததல்ல இந்த கோப்பையும் வெற்றியும் என்று போகிற போக்கில் தோனிக்கும் கொட்டு வைத்துள்ளார் கம்பீர்.
ஜெயவர்த்தனே அபாரம்
இறுதிப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ஜெயவர்த்தனே அபாரமாக ஆடி சதமடித்தார். இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. பின்னர் இந்தியா விளையாட வந்தது. அதில் ஆரம்பம் படு தடுமாற்றமாக அமைந்தது. 31 ரன்கள் சேர்ப்பதற்குள் சச்சினும், ஷேவாக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர வைத்தனர்.
கலக்கலான கம்பீர் ஆட்டம்
ஆனால் கம்பீரும், தோனியும் இணைந்து அற்புதமான ஆட்டத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆடி 109 ரன்கள் சேர்த்தனர். கம்பீர் சிறப்பாக ஆடி வந்த நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தோனியும், யுவராஜ் சிங்கும் புகுந்து விளையாடினர். இந்தியா தனது உலகக் கோப்பையை அதிரடியாக வென்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது உலகக் கோப்பையை இந்தியா வென்ற தருணம் அது.
கம்பீர் ஆட்டமும் முக்கியம்
இதை மனதில் வைத்துத்தான் கம்பீர் இப்படி ஒரு கருத்தைக் கூறியுள்ளார். உண்மையில் அந்த போட்டியின்போது கம்பீர் காட்டிய வேகமும், விவேகமும் இந்திய அணிக்கு பெரும் உயர்வைக் கொடுத்தது. கம்பீர் மட்டும் புத்திசாலித்தனமாகவும், சமயோஜிதமாகவும் அந்த இன்னிங்ஸை ஆடியிருக்காவிட்டால் இந்தியாவுக்கு நிச்சயம் ஏமாற்றமே கிடைத்திருக்கும். தோனி, யுவராஜ் ஆகியோர் இருந்தாலும் கூட கம்பீரின் ஆட்டம்தான் கோப்பைக்கு முக்கியக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.