லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் நிச்சயம் அவ்வளவு எளிதாக இருக்காது என்று கோலி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியத சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் ஆட்டத்தில் 7ல் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

நாளை மான்செஸ்டரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2லும் வென்றுள்ளது.மான்செஸ்டரில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணியே வாகை சூடியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, நாளைய அரையிறுதி அவ்வளவு எளிதான போட்டியாக இருக்காது என்றார். லீக் போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடியது.
அரையிறுதிக்குள் நுழைந்திருப்பது மகிழ்ச்சி. நியூசிலாந்தை எதிர்கொள்ள இந்திய அணி திட்டங்களுடன் தயாராக உள்ளது. பவுலிங் தான் மிகப்பெரிய பலம். மற்ற அணிகளை ஒப்பிடும் போது இந்திய அணி தான் பவுலிங்கில் மிகச்சிறந்த அணியாக உள்ளது. அவர்கள் அரையிறுதியிலும் சிறப்பாக செயல்படுவார்கள்.
5 சதங்களுடன் முன்னணியில் இருக்கிறார் ரோகித் சர்மா. நிச்சயம் மிக சிறப்பாக விளையாடுவோம். முன்னாள் கேப்டன் தோனி தலைமையில் தான் என் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது. அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அவர் இருக்கும் போதே கேப்டனானது அதிர்ஷ்டம் தான் என்றார்.