சென்னை: இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றிய ஜேக் லீச், முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் தன்னை விளாசியது குறித்து பேசியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து நிர்ணயித்த 420 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 72 ரன்களும், ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் ஜேக் லீச் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எனினும், முதல் இன்னிங்ஸில் ஜேக் லீச் ஓவரில் தான், ரிஷப் பண்ட் ஓவருக்கு ஓவர் சிக்ஸர்களை பறக்கவிட்டார். நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், கொஞ்சமும் அசராத ரிஷப், ஜேக் லீச் பந்துகளில் அதகளம் புரிந்தார்.
இந்நிலையில், வெற்றி குறித்து ஜேக் லீச் கூறுகையில், "இந்தியாவிடம் மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப் இருந்தது. அதனால் ஏற்படும் பிரஷரை நான் அறிவேன். முதல் இன்னிங்ஸில், ரிஷப் பண்ட் ஐபிஎல் விளையாடுகிறாரோ என்று நினைத்தேன். ஒரு ஸ்பின்னராக இது போன்ற சவால்களை எதிர்கொண்டாக வேண்டும். அந்த நாள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், சக வீரர்கள் நான் அதில் இருந்து வெளிவர உதவினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.