டர்பன் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பான்டிங் ஆகிய இரு கிரிக்கெட் ஸ்டார்கள் செய்யத் தவறியதை, இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஜேக்கஸ் கல்லிஸ் செய்து அசத்தி விட்டார்.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அட்டகாசமான சதம் போட்டு கல்லிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
சச்சினும் சரி, ரிக்கி பான்டிங்கும் சரி தங்களது கடைசி டெஸ்ட் போட்டிகளில் சதம் போட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
டர்பனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் கல்லிஸுக்குக் கடைசி டெஸ்ட் போட்டியாகும். இதில் அவர் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தான் ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்பதை வெளிப்படுத்தினார். இந்தியப் பந்து வீச்சை சமாளித்து ஆடிய கல்லிஸ் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் தனது கடைசி போட்டியில் சதம் கண்ட சில வீரர்கள் வரிசையில் கல்லிஸ் இணைந்துள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ராகுல் டிராவிடுடன் இணைந்துள்ளார் கல்லிஸ்.
முன்னதாக கல்லிஸ் பேட்டிங் செய்ய வந்தபோது இந்திய கேப்டன் டோணி தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுத்து நின்று கல்லிஸுக்கு மரியாதை செய்தனர்.
கல்லிஸின் இன்றைய ஆட்டம் ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தது. இப்படி விளையாடும் இவர் ஏன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் ரசிகர்களின் கவலை வார்த்தையாக இருந்தது.
எப்படியோ, கிரிக்கெட் உலகம் கண்ட வெகு சில அபாரமான ஆல் ரவுண்டர்களில் கல்லிஸுக்கும் தனி இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.