கொழும்பு: இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் கபில் தேவிற்கு பின் 200 விக்கெட்டுகள் மற்றும் 2500 ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. சமீப காலங்களில் ரவீந்திர ஜடேஜா அளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்ட வீரர் யாருமே இல்லை என்ற அளவிற்கு விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று எந்த வடிவமாக இருந்தாலும், ஜடேஜாவின் ஆட்டம் வெறித்தனமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸை விடவும் சிறந்த ஆல்ரவுண்டராக வளர்ந்திருக்கிறார்.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. ஆட்டத்தின் எந்த சூழலில் களமிறங்கினாலும், ரிஸ்க் இல்லாமல் பேட்டிங் ஆடும் ஜடேஜாவை விக்கெட் வீழ்த்துவது எளிதல்ல. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு சிங்கிளை அதிகமாக எடுக்கக் கூடிய வீரராக ஜடேஜா இருக்கிறார்.
ஆனால் ஜடேஜாவின் பேட்டிங் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதோ, அதே அளவிற்கு ஜடேஜாவின் பவுலிங் மோசமாகியுள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்தா நிலையில் விமர்சனங்களுக்கு தனது பவுலிங் மூலம் ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 4 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு முன் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், அஜித் அகர்கர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், கபில் தேவ் ஆகியோர் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
அதேபோல் கபில் தேவிற்கு பின் இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் மற்றும் 2500 ரன்களை விளாசி வீரர் என்ற அரிய சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். உலகக்கோப்பைத் தொடர் நெருங்கி வரும் சூழலில், ஜடேஜா மீண்டும் தனது உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.