
ஜடேஜா பொறுமை
மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் நாளில் களமிறங்கிய ஜடேஜா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோருடன் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். எப்போதும் அதிரடியாக ஆட கூடிய ஜடேஜா, இம்முறை டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு விளையாடினார்.

அஸ்வின் அரைசதம்
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜடேஜா 45 ரன்களுடன் களத்தில் நின்றார். 2வது நாள் தொடங்கியதும் இலங்கை பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங் மூலம் ஜடேஜா, அஸ்வின் ஜோடி தண்டித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணற, அஸ்வின் அரைசதம் கடந்தார்.

ஜடேஜா சதம்
மறுமுனையில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா, 160 பந்துகளில் தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். ஜடேஜா வழக்கம் போல் தனது பேட்டை சுழற்றி கொண்டாடி, பின்னர் வானத்தை பார்த்து நெகிழ்ச்சியுடன் நின்றார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். அப்போது வர்ணனையில் இருந்த கவாஸ்கர், ஜடேஜாவை ராக் ஸ்டார் என்று வார்னே பாராட்டியதை குறிப்பிட்டார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி
வார்னே சொன்ன வார்த்தைகளை ஜடேஜா தற்போது நிரூபித்துவிட்டதாக குறிப்பிட்ட கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக ஜடேஜா இருப்பதாக பாராட்டினார். வார்னேவால் அடையாளப்படுத்தப்பட்ட ஜடேஜா, அவர் மறைந்த நாளில் சதம் விளாசியதை, குருவுக்கு சிஷ்யன் சதம் மூலம் அஞ்சலி செலுத்தி விட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











