சென்னை: 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் விரைவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரில் ஜடேஜா செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதால், ரசிகர்கள் பலரும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடினர். அந்த உலகக்கோப்பைத் தொடரை வெல்வதற்கு யுவராஜ் சிங் முக்கியக் காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் சுமார் 400 ரன்கள், பவுலிங்கில் 15 விக்கெட்டுகள் என்று ஆல்-ரவுண்டராக யுவராஜ் சிங் அசத்தினார்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து 2011ஆம் ஆண்டு தேர்வுக் குழு தலைவராக இருந்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இந்திய மைதானங்களின் சூழல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் நன்றாக தெரியும்.
அதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளில் யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உண்டு. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, அவர்களுக்கு முற்றிலும் புதிய சூழல். ஏனென்றால் 2016ஆம் ஆண்டுக்கு பின் இந்திய மைதானங்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவே இல்லை. அதனால் பாகிஸ்தான் அணி என்ன மாதிரியான வீரர்களோடு வருகிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் வெற்றி அமையும். இந்திய ஆடுகளங்களில் அதிகளவு பவுன்ஸ் இருக்காது.
அதிகளவில் பந்துகள் சுழலும். இதனால் இந்திய அணி வெல்வதற்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதேபோல் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் ஆல் ரவுண்டர்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். 2011ஆம் ஆண்டு யுவராஜ் சிங் விளையாடிய ரோலில் ஜடேஜா விளையாட வேண்டும். ஜடேஜா, அக்சர் படேல் உள்ளிட்டோர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.