கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 75.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் நிர்வா்கியாக, இரும்பு மனிதராக வலம் வந்தவர் டால்மியா. உலக கிரிக்கெட் அரங்கில் நிலவி வந்த வல்லரசு ஆதிக்கத்தை தகர்த்து இந்தியாவின் பக்கமாக உலக கிரிக்கெட்டை திருப்பிக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் இவர்.

மாரடைப்பு காரணமாக நேற்று இரவு அவர் மரணமடைந்தார். வியாழக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை கொல்கத்தாவில் உள்ள பி.எம். பிர்லா மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த டால்மியாவுக்கு நேற்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்ததோடு இந்திய கிரிக்கெட் உலகைப் பார்த்து உலக கிரிக்கெட் வல்லரசுகள் பயந்து நடுங்கும் அளவுக்கு சூழலை ஏற்படுத்தியவர் டால்மியாதான்.
கிரிக்கெட் நிர்வாகியாக இவர் சாதிக்காதது என்று எதுவுமே இல்லை. தோல்வியையே கண்டறியாதவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருந்தார். அப்போதுதான் உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் வாரியம் சக்தி மிக்க அமைப்பாக உருவெடுத்தது.
அவரும் இந்தர்ஜித் சிங் பிந்த்ராவும் இணைந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலிமை மிக்க சக்தி மிக்க, பொருளாதார ரீதியில் வலிமையான விளையாட்டு அமைப்பாக மாற்றியமைத்தனர்.
மேலும் அதுவரை இந்தியத் துணைக் கண்டத்தின் பக்கம் திரும்பாமல் இருந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட்டையும் கொண்டு வந்து அசத்தினர். 1987ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்கு இந்த இருவரும் மேற்கொண்ட அயராத உழைப்பே காரணம்.
பின்னர் மீண்டும் 1996ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட்டை இந்தியா நடத்தியது. இந்த இரண்டு போட்டிகளுமே பெரும் வெற்றி பெற்றவை. குறிப்பாக வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தவையாகும்.
1997ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் டால்மியா. மூன்று ஆண்டுகள் அப்பதவியில் இருந்தபோது கிரிக்கெட் உலகம் பல அதிரடி மாறுதல்களைச் சந்தித்தது.
டால்மியா ஐசிசி தலைவரக இருந்தபோது இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தது. இந்திய கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக, வீழ்த்த முடியாத சக்தியாக வலம் வந்த டால்மியா நிதி முறைகேடு புகார்கள் காரணமாக 2006ல் பதவியிலிருந்து விலகும் நெருக்கடி ஏற்பட்டது.
டால்மியா சகாப்தம் அன்றோடு முடிவுக்கு வந்தது. இருப்பினும் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக சீனிவாசனால் நியமிக்கப்பட்டார்.
டால்மியாவின் மரணம் இந்திய கிரிக்கெட் உலகுக்கு நிச்சயம் இழப்புதான்