மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த 62 வயதாகும் கிரேக் பார்க்ளே பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் பதவிக்காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஐசிசியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.
3வது முறையாக பதவியில் தொடர கிரேக் பார்க்ளே விரும்பாத நிலையில், அடுத்த ஐசிசி தலைவராக பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1ஆம் தேதி ஐசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்கவுள்ளார். இதன் மூலமாக 35 வயதிலேயே ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தவர் என்ற சாதனையை ஜெய் ஷா படைத்துள்ளார்.

அதேபோல் ஐசிசி தலைவர் பொறுப்பை வகிக்கும் 5வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக 1997ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவர் பொறுப்புக்கு வந்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த அவர், வங்கதேச அணிக்கு டெஸ்ட் அங்கீகாரம் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தார்.
அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரராக அல்லாமல் ஐசிசி தலைவராக அமர்ந்த முதல் நபர் ஜக்மோகன் டால்மியா தான். இவரைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு சரத் பவார் ஐசிசி தலைவராக பொறுப்பு வகித்தார். 2 ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்தார். பின்னர் பிசிசிஐ தலைவராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.ஸ்ரீனிவாசன் 2014ஆம் ஆண்டு பொறுப்பு வகித்தார்.
பின்னர் வருடாந்திர ஆய்வுக் குழுவில் ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பிசிசிஐ தரப்பில் அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். அவரது இடத்தில் ஷஷாங்க் மனோகர் ஐசிசி தலைவர் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார். இவர் 2016 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை பொறுப்பில் இருந்தார்.
இந்த பொறுப்புக்கு தற்போது ஜெய் ஷா வந்துள்ளார். பிசிசிஐ செயலாளராக இருக்கும் போது ஜெய் ஷாவிடம் கேள்வி கேட்பது சாதாரண விஷயமல்ல. அவர் நினைத்த விஷயத்தை சக நிர்வாகிகளிடம் ஆலோசித்து உடனடியாக முடிவை எடுக்கலாம். ஆனால் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதால், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.