கிரிக்கெட் வாரியத் தலைவராகிறார் சீனிவாசனின் ஆதரவு பெற்ற ஜக்மோகன் டால்மியா?
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக சீனிவாசனின் ஆதரவு பெற்றவரான ஜக்மோகன் டால்மியா, நாளை சென்னையில் நடைபெறும் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் டால்மியா ஒரு மனதாக தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கிறார் டால்மியா. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் இருக்கிறார். ஆனால் அவரை தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. எனவே அவரால் நாளைய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கூட்டத்திற்கு வரலாம், தேர்தல் நடந்தால் வாக்களிக்கலாம். இவ்வளவுக்கு மட்டும்தான் தற்போது சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட் அதிகாரம் கொடுத்துள்ளது.
எனவே டால்மியாவை தலைவர் பதவிக்கு களம் இறக்குகிறார் சீனிவாசன். இதற்கு பல்வேறு சங்கத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் தலைவரான டால்மியா, ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகார் வெடித்தபோது அப்போதைய தலைவர் சீனிவாசனால் தற்காலிக தலைவராக அறிவிக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் டால்மியாவுக்கு எதிராக சரத் பவார் குரூப் யாரையாவது நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால் இதுவரை யாருடைய பெயரும் அடிபடவில்லை.


Click it and Unblock the Notifications