இந்தியாவில் பிறந்து அயர்லாந்துக்கு விளையாடும் ஜெய் முன்ட்ரா..முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அபாரம்
பெல்ஃபாஸ்ட்: இந்தியாவில் பிறந்த அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான தனது டி20 சர்வதேச (T20I) அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் மேத்யூ ஹம்ப்ரிஸைத் தொடர்ந்து தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது அயர்லாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தனது முதல் சர்வதேச விக்கெட்டாக சஞ்சு சாம்சனை போல்டாக்கி ஜெய் முன்ட்ரா அசத்தினார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமான ஜெய் முன்ட்ரா, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி தனது அறிமுகப் போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பந்துவீச வந்த இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர், 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு சாம்சனை போல்டாக்கி அயர்லாந்து அணிக்கு ஆரம்பக்கால திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தார்.

இதன் மூலம், அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டி20 போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜெய் முன்ட்ரா படைத்துள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் தான் வீசிய முதல் பந்திலேயே சஞ்சு சாம்சனை வீழ்த்தி முன்ட்ரா அசத்தினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே மணிக்கு 139 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட லெந்த் டெலிவரியை சாம்சன் அடிக்க முயன்றார்.
ஆனால் பேட்டின் உள்பகுதியில் பட்ட பந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது. இதனால் சஞ்சு சாம்சன் போல்டாகி வெளியேற, அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் கிடைத்தது.இதற்கு முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அயர்லாந்து பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ், தனது முதல் பந்திலேயே ரிஷாத் ஹொசைனை வீழ்த்தி இந்த சாதனையை முதலில் செய்திருந்தார். அதே ஓவரில் தஸ்கின் அகமதுவையும் வீழ்த்திய அவர், 2 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய் முன்ட்ரா யார்?
ராஜஸ்தானில் பிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜெய் முன்ட்ரா, இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த சிமி சிங்கிற்குப் பிறகு அயர்லாந்து அணிக்காக விளையாடும் இரண்டாவது ஆசிய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை ஜெய் முன்ட்ரா பெறுகிறார்.
ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோங்க் என்ற சிறிய நகரில் பிறந்த முன்ட்ராவுக்கு, சிறுவயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டு ஒரு அகாடமியில் சேர்ந்தார். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்கினாலும், தனது 16 வயதில் அவர் ஒரு டாப்-ஆர்டர் பேட்டராகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மாறினார்.
அயர்லாந்து கிரிக்கெட் தளத்திற்கு அளித்த பேட்டியில், தனது படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கிரிக்கெட் தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளப்பட்டதாக முன்ட்ரா தெரிவித்தார். தனது "கிரிக்கெட் பயணம் முடிந்துவிட்டது" என்று நினைத்த அவர், பொழுதுபோக்காக மட்டுமே விளையாடி வந்துள்ளார். கல்லூரி காலத்தில் டென்னிஸ் பந்து மூலம் மீண்டும் மித வேகப்பந்து வீசத் தொடங்கிய அவர், பின்னர் கல்லூரி அணிக்காக மீண்டும் லெதர் பந்து கிரிக்கெட்டிற்குள் நுழைந்தார். பந்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், வேகப்பந்து வீசுவதற்கான அவரது ஆர்வம் மீண்டும் உயிர்பெற்றது.
2019 இல் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, முன்ட்ரா ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது. முழுநேர கார்ப்பரேட் வேலைக்குச் சென்று கிரிக்கெட்டை முழுமையாகக் கைவிடுவதற்குப் பதிலாக, விளையாட்டுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி, 2021 ஆம் ஆண்டில், தனது 24 ஆவது வயதில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் முதுகலை பட்டம் (Master's degree) பெறுவற்காக அயர்லாந்து சென்றார். அங்கு தனது படிப்பைத் தொடர்ந்துகொண்டே, தனது கிரிக்கெட் கனவையும் வளர்த்துக்கொண்டார்.


Click it and Unblock the Notifications

