பெங்களூர்: ஒரு மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆர்சிபி அணி வீரர் யாஷ் தயாலின் முன்ஜாமீன் மனுவை ஜெய்ப்பூர் போக்சோ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது அவருக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
ஜெய்ப்பூர் நீதிமன்றம் மூன்றாம் அமர்வு நீதிபதி அல்கா பன்சால் முன் இந்த ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "பதிவுகளில் உள்ள சான்றுகள் யாஷ் தயால் தவறாக சிக்கவைக்கப்பட்டிருப்பதை காட்டவில்லை; விசாரணையில் அவரது ஈடுபாடு வெளிப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டத்தில் முன்ஜாமீன் வழங்க முடியாது" எனத் தெரிவித்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல்நிலைய எஃப்.ஐ.ஆரில், பாதிக்கப்பட்ட மைனர் பெண், தயால் தனது கிரிக்கெட் எதிர்காலத்துக்கு உதவுவதாகக் கூறி, தம்மை மிரட்டி, சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மற்றும் கான்பூர் ஹோட்டல்கள் உட்பட பல இடங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்ணின் மொபைலில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அழைப்பு, ஹோட்டல் தங்குவதற்கான பதிவுகள் போன்றவற்றை போக்சோ சட்டத்தின் கீழ் முக்கிய ஆதாரங்களாகக் காவல்துறை பதிவு செய்துள்ளது.
தயாலின் வழக்கறிஞர் குணால் ஜெயின், யாஷ் தயால் அப்பெண்ணை பொது இடங்களிலேயே சந்தித்ததாகவும், ஒருபோதும் தனியாக சந்திக்கவில்லை என்றும் வாதிட்டார். அப்பெண் தன்னை வயது வந்தவராகக் காட்டி, நிதிப் பிரச்சனைகளைக் கூறிப் பணம் பெற்றார். பின்னர் மேலும் பணம் கேட்டு மிரட்டினார். இது "மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரை" கேலி செய்யவும், பணம் பறிக்கவும் செய்யப்பட்ட முயற்சி என்றார்.
எனினும், இதனை ஏற்காத ஜெய்ப்பூர் நீதிமன்றம் தயாலுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 வயதான யாஷ் தயால் இன்னும் ஆர்சிபி அணியிலே நீடிக்கிறார். ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல, யாஷ் தயால் முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.