பிர்மிங்காம்: இந்திய அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் ஃபீல்டிங் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் அவர் ஸ்லிப் ஃபீல்டராகவோ அல்லது கல்லி ஃபீல்டராகவோ பேட்ஸ்மேனுக்கு அருகே நின்று சிறப்பான கேட்சுகளைப் பிடித்துள்ளார்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்லிப் திசையில் நின்றிருந்த அவர் நான்கு கேட்சுகளை தவறவிட்டார். இது இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சி செய்யவில்லை. அவரது இடத்தில் சாய் சுதர்சன் ஸ்லிப் ஃபீல்டராக செயல்பட்டார். பயிற்சியின் போது சாய் சுதர்சன், நிதீஷ்குமார் ரெட்டி, தருண் நாயர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகிய நால்வரும் ஸ்லிப் ஃபீல்டிங் மற்றும் கல்லி ஃபீல்டிங் திசையில் நின்று பயிற்சி செய்தனர்.
கே.எல். ராகுலும் ஸ்லிப் ஃபீல்டராக பயிற்சி மேற்கொண்டார். ஆனால் ஜெய்ஸ்வால் அந்த இடத்தில் நிற்கவில்லை; அவர் ஷார்ட் லெக் திசையில் தான் ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதன் மூலம், ஸ்லிப் திசையில் ஜெய்ஸ்வால் கேட்சுகளை தவறவிட்டதால், அவருக்கான இடத்தை பயிற்சியாளர் கம்பீர் மாற்றியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வலைப்பயிற்சியின் போது தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நேரடியாகவே ஜெய்ஸ்வாலுக்கு ஃபீல்டிங் பயிற்சிகளை அளித்தார். எப்படி பேட்ஸ்மேனுக்கு அருகே நின்று கேட்ச் பிடிக்க வேண்டும் என அவர் செய்து காட்டி சில ஆலோசனைகளை வழங்கினார். இதன் மூலம் கம்பீர், ஜெய்ஸ்வாலின் ஃபீல்டிங் மீது அதிருப்தியுடன் இருப்பது தெரிகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாகவே செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் அவர் 101 ரன்கள் எடுத்திருந்தார். எனவே, அவரை அணியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவர் தொடர்ந்து துவக்க வீரராக விளையாடுவார். ஆனால், அவரது ஃபீல்டிங் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வரும் புதன்கிழமை அன்று துவங்க உள்ளது.