
லோகேஷ் உறுதி
இந்தியாவைப் பொறுத்தவரை அணியில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது. ஏனெனில், முதல் போட்டியில் மிடில் ஆர்டர் சொதப்பல்களைத் தவிர, இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. தொடக்க வீரர்கள் ராகுல் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் தாண்டியதே மிகப்பெரிய விஷயம். அவர் கொடுத்த இரண்டு கேட்சுகளையும் இங்கிலாந்து தவறவிட்டது வேறு கதை. ஆனால், அதில் முதல் கேட்ச் அவர் அரைசதம் அடித்ததற்கு பிறகு தான் கொடுத்தார். அதாவது, அவர் தனது 52வது ரன்னில் தான் முதல் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஸோ, தன்னை அணியில் சேர்த்ததற்கு, அவர் அரைசதம் அடித்து, நியாயம் கற்பித்துவிட்டார். அதுவே அவரது திறமையை வெளிக்காட்ட போதுமான சான்றாகும்.

ஜடேஜா உறுதி
மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும் நிதானமாக தான் விளையாடினார். நேர்த்தியான ஷாட்ஸ்களை வெளிப்படுத்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் ஓலே ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்தில் மட்டும் அவர் ஏமாறாமல் இருந்திருந்தால், நிச்சயம் அவரும் அரைசதம் கடந்திருப்பர். ஆனால், இந்திய அணியின் பிரச்சனை புஜாரா, கோலி, ரஹானே ஆகிய இவர்கள் மூவரைச் சுற்றித் தான். மூவரும் மெகா சொதப்பல். லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் நம்பிக்கை அளிக்கிறார். ஜடேஜா அரைசதம் அடித்து, தனது இடத்தை சிமெண்ட் போட்டு பூசி ஸ்ட்ராங் ஆகிவிட்டார்.

ஷர்துல் தாகூர் மிஸ்ஸிங்
பந்துவீச்சும் அபாரம் தான். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிற்கு இந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி தான் பலமே. ஆனால், காயம் காரணமாக ஷர்துல் தாகூர் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதில் யார் அணியில் சேர்க்கப்படப் போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இந்தியாவின் நிலைமை இப்படியிருக்க, இங்கிலாந்துதரப்பில் இருந்து ஒரு ஷாக் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், இங்கிலாந்திற்கு அது நிச்சயம் பேரிழப்பாக அமையும்.

வெளியேற்றமா?
ஆம்! இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இருவரும், நேற்று நடைபெற்ற இங்கிலாந்து பயிற்சி செஷனில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,145 விக்கெட்டுகள்
ஸ்டூவர்ட் பிராட், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயிற்சியின் போது காலின் பின்பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார். அதேபோல், ஆண்டர்சனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால், இருவரும் புதன்கிழமை அன்று போட்டிக்கு முந்தைய கடைசி செஷனில் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்துள்ளனர். இங்கிலாந்தின் மிக வெற்றிகரமான இரண்டு டெஸ்ட் பந்துவீச்சாளர்களான இருவரும் சேர்ந்து 312 டெஸ்ட் போட்டிகளில் 1,145 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

9 விக்கெட்ஸ்
அக்டோபர் 2016 க்கு பிறகு இந்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி இல்லாமல் இங்கிலாந்து ஒரு டெஸ்ட் போட்டி கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், Lancashire அணியின் சகிப் மஹ்மூத் மாற்று வீரராக புதன்கிழமை அணியில் சேர்க்கப்பட்டார். 24 வயதான மஹ்மூத் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடியதில்லை ஆனால் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஃபேஸ் அட்டாக்
ஆஃப்-ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டர் மொயீன் அலியை மாற்று வீரராக அணியில் சேர்த்ததைத் தொடர்ந்து, இரண்டாவது மாற்று வீரராக மஹ்மூத் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருவேளை ஆண்டர்சன், பிராட் இப்போட்டியில் விளையாடவில்லை எனில், மஹ்மூத், ஓலே ராபின்சன், மார்க் வூட், கிரேக் ஓவர்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் பவுலிங் கூட்டணி இந்தியாவை எதிர்கொள்ளும். இரு சீனியர் வீரர்களின் மிஸ்ஸிங், இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பேரிழப்பாகும். ஆனால், அதற்காகவெல்லாம் இந்தியா ஹேப்பி மோடுக்கு வர முடியாது. ஓலே ராபின்சன் தலைமையிலான இந்த இங்கிலாந்து ஃபேஸ் அட்டாக் இந்தியாவுக்கு நிச்சயம் பெரும் அச்சுறுத்தல் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.


Click it and Unblock the Notifications











