லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 10ஆம் தேதி முதல் நடக்கவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை விடுத்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக விளையாடி வந்த ஆண்டர்சன், 21 ஆண்டுகளாக விளையாடி அசத்தியுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் மெக்கல்லம் கேட்டுகொண்டதால், ஆண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார்.
இதனால் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையுடன் ஆண்டர்சன் ஓய்வு பெறுவார். இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்க முடியும். இந்த நிலையில் ஆண்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சம்மரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி தான் எனது கடைசி போட்டியாக இருக்கும்.
20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்காக விளையாடியது அற்புதமான பயணமாக உள்ளது. சிறு வயதில் இருந்து மிகவும் விரும்பிய கிரிக்கெட் விளையாட்டை விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை நிச்சயம் மிஸ் செய்வேன். ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். ஒதுங்கி கொள்வதற்கும், மற்ற வீரர்களின் கனவை உணர்ந்ததால், அதனை நனவாக்குவதற்கும் இதுவே சரியான நேரம். இதனை விடவும் மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை.
அதேபோல் எனது கனவை எட்டிப்பிடிப்பதற்கு குடும்பத்தினரின் காதலும், ஆதரவும் இல்லையென்றால் நிச்சயம் செய்திருக்க முடியும். அதனால் டேலியல்லா, லோலா, ரூபி மற்றும் எனது பெற்றொருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் என் சக வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அடுத்தடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன். எனது நாட்களை கோல்ஃப் விளையாட்டு ஆக்கிரமிக்கும் என்று தெரிவித்துள்ளார்.